காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி கொழும்பில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், இன்று யாழ்ப்பாணத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இலங்கை ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையிலான குறித்த அலுவலகப் பிரதிநிதிகள், இன்று யாழ்ப்பாணத்தில் விசாரணை நடத்த வந்திருந்தனர்.
ஆனால், மக்களில் பலர் சாட்சியமளிக்க மறுத்துவிட்டனர். மாறாக மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் ஏமாற்றியது போன்று மைத்திரி- ரணில் அரசாங்கமும் ஏமாற்றுவதாக மக்கள் குற்றம் சுமத்தினர்.
விசாரணை நடத்துவதற்காக, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்குள் கொழும்பில் இருந்து சென்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறியும் அலுவலகத்தின் பிரதிநிதிகள் அமர்ந்திருந்தனர்.
மொழிபெயர்ப்பாளர்களும் அங்கு தயாராக இருந்தனர். ஆனால் மக்கள் எவரும் சாட்சியமளிக்க விரும்பவில்லை. மாறாக மண்டபத்துக்குள் சென்று அதிகாரிகள் முன்னிலையில் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
தங்களுக்கு நிவாரணங்கள் தேவையில்லை எனவும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை வெளிப்படுத்தப்பட்டு, நீதி கடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
அதேவேளை, விசாரணை நடத்த வந்திருந்த அதிகாரிகளுக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களின் மண உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் மொழிபெயர்ப்பும் உரிய முறையில் செய்யப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
ஏதோ கடமைக்கு விசாரணை நடத்தி இலங்கை ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பித்தால் போதும் என்ற மன நிலையில், கொழும்பில் இருந்து வந்த சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையிலான குழவினரின் செயற்பாடுகள் அமைத்திருந்தாகவும் அவர் மேலும் கூறினார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் கண்டறியும் அலுவலகத்தின் பணிகள் தற்போதைக்கு முடிவடையாதென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனரட்ன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.