தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கில், பொதுத்தேவைக்கென ஒதுக்கப்படும் நிலங்களில் அத்துமீறிய குடியேற்றங்களை மேற்கொள்வதனால் குறித்தத் திட்டங்களை நிறைவேற்றமுடியாமல் உள்ளதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் கி.கிருபராசா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட சூடுபத்தியசேனை பகுதியில் திண்மக்கழிவு நடவடிக்கைக்காக ஐந்து ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட காணியில் மூன்று ஏக்கர் காணியில் இப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு சில சகோதர இனத்தவர்கள் அத்துமீறி வேலிபோட்டுள்ளதால், திண்மக்கழிவுகளை அகற்றுவதற்கு நிலப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் கிருபராசா கூர்மை செய்தித்தலத்திற்கு தெரிவித்தார்.
அத்துமீறிய காணி அபகரிப்பினால் இப்பிரதேச செயலகப்பிரிவில் அகற்றப்படும் திண்மக்கழிவுகளை கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள வாகனேரி பகுதிக்குள் அகற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் உறுப்பினர் குற்றம் சுமத்தினார்.இவ்வாறு மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் கழிவுப்பொருட்களை கொட்டுவதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், மக்கள் குடியிருக்க முடியாத நிலை எதிர்காலத்தில் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
எனவே, எந்த நடவடிக்கைக்காக நிலங்கள் ஒதுக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதுடன், அபகரிக்கப்பட்ட காணியை மீட்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.