எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், பிரதி தலைவர் பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வடிவேல் சுரேஷ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இன்று புதன்கிழமை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அத்துடன் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் இரங்கல் செய்தியை கருணாநிதியின் மகள் கனிமொழியிடம் அமைச்சர் மனோ கணேசன் வழங்கினார்.
தமிழக அரசியலில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இரு பெரும் கழகங்களும் தீவிரமான திராவிட அரசியலை முன்னெடுத்து வந்த சூழலில், ஈழப் போராட்டத்திற்கான இந்தக் கழகங்களின் பங்களிப்பு இந்திய மத்திய அரசின் கொள்கைககளை பின்பற்றியதாகவே அமைந்திருந்தது.
ஆனாலும், செல்வி ஜெயலலிதா 2016 ஆம ஆண்டு மரணிப்பதற்கு முன்னரான நான்கு வருடகால அரசியலில், ஈழத் தமிழர் தொடர்பான விடங்களில் இந்திய மத்திய அரசின் கொள்கைகளை மீறித் துணிவுடன் செயற்பட்டிருந்தார்.
2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட ஈழப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் கருணாநிதி, இந்திய மத்திய அரசின் கொள்கைக்கு அமைவாகவே செயற்பட்டிருந்தார் என ஈழத் தமிழ் அரசியல் விமர்சகர்கள் பலரும் குற்றம் சுமத்தியிருந்தனர்.
ஆனாலும், தமிழ் உலகில் கலைஞர் கருணாநிதி அரசியல் விடயங்களுக்கு அப்பால், சிறந்த கவிஞனாகவும் தமிழ் இலக்கியப் படைப்பாளியாகவும் பல்வேறு பரிமாணங்களைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.