நான்காவது அதிவேக தாக்குதல் படகு அணியின் 26 கடற்படையினர் சிறப்பு படகு படையணியின் 36 கடற்படையினர் உட்பட 62 இலங்கைக் கடற்படையினர் அமெரிக்கக் கடற்படையின் விசேட அதிகாரிகள் குழுவிடம் பயிற்சி பெற்றுள்ளனர்.
இந்தப் பயிற்சியின்போது அமெரிக்க இலங்கை கடற்படையின் மூத்த தளபதிகள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இவ்வாறான பயிற்சிகள் இருதரப்பு புரிந்துணர்வுக்கு ஏற்ப அவ்வப்போது வழங்கப்படும் என அமெரிக்க கடற்படையின் விசேட படைப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்தப் பயிற்சி வழங்கும் நடவடிக்கைகளுக்கு முப்படைகளின் தளபதி என்ற அடிப்படையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியளித்தாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சும் கூறியுள்ளது.
நிபுணத்துவ திறன் விருத்தி மற்றும் இரு நாட்டு கடற்படையினருக்கும் இடையிலான ஆற்றலை பரிமாறிக் கொள்ளவும் இந்தப் பயிற்சிகள் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை, அமெரிக்கக் கடற்படையின் விசேட படைப்பிரிவு வழங்கிய பயிற்சி தொடர்பாக ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் ஹந்து நெத்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
போர் முடிவடைந்துள்ளதாக இலங்கை அரசாங்கமே கூறியுள்ள நிலையில், அமெரிக்கா எந்த அடிப்படையில எந்த நோக்கத்துக்காக இந்தப் பயிற்சிகளை வழங்குகின்றது என கொழும்பில் உள்ள மனித உரிமை அமைப்புகளும் கேள்வி எழுப்பியுள்ளன.
சீன அரசின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்து வரும் நிலையில். இவ்வாறான பயிற்சிகளை வழங்குவதன் மூலமாக இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என அமெரிக்கா நம்புவதாக அவதானிகள் கூறுகின்றனர்.
மைத்திரி- ரணில் அரசாங்கம் சீனாவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமொிக்க, இந்திய அரசுகள் அதிருப்பதியடைந்துள்ளதாக இந்திய ஊடகங்ககள் விமர்சித்து வரும் நிலையில் இந்தப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.