கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு

வாகரைப் பிரதேசத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாவதாக முறைப்பாடு

தடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் குற்றச்சாட்டு
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 15 10:48
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 15 10:49
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கிழக்கு மாகாணத்தில் போரால் பாதிக்கப்பட்ட வாகரைப் பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் குடியிருப்புக்கள் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தோணிதாட்டமடு கிராமத்தில் கடந்த 10ஆம் திகதி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானையின் தாக்கத்தினால் இரு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், மேலும் மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாரிமுத்து என்ற கிராமவாசி ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை- தோணிதாட்டமடு கிராமம் கடந்த கால யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தினால் அங்கு வாழ்ந்த மக்களில் ஐம்பத்தி்ற்கும் அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்ட கிராமங்களில் ஒன்று எனத் தெரிவிக்கும் கிராம வாசியான மாரிமுத்து, படுகொலை இடம்பெற்ற காலங்களிலிருந்து மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் கூறினார்.

போர் முடிவடைந்தாலும் இந்தக் கிராமத்தைப் பொறுத்தவரையில் உயிரிழப்புக்களும் உடமைகள் சேதப்படுத்தப்படுவதும் தொடர்ந்து இடம்பெறுவதாக குறிப்பிடும் அவர், போரினால் இடம்பெயர்ந்த மக்கள் உரிய முறையில் குடியேற எதுவுமே செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மக்கள் தமது சொந்த இடத்தில் குடியேற வேண்டும் என்பதற்காக தங்களால் இயன்றவற்றை செய்து உதவிகள் எதுவுமேயின்றி தாமாகவே மீள் குடியேறியுள்ளனர்.

இக் கிராமத்தில் 180க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்தன. ஆனால் தற்போது 40 குடும்பங்கள் மாத்திரம் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வருகின்றனர்.

யுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட இந்தக் கிராமத்தை அரசாங்க அதிகாரிகளோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களோ வந்து பார்வையிடுவதுமில்லை.

மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வசிக்கும் மக்களை காட்டு விலங்குகளும் விட்டு வைப்பதில்லை என மிகவும் மனவேதனையுடன் விபரித்தார்.

காலம் காலமாக் காட்டு யானையின் அச்சத்தில் வாழ்ந்துவரும் நிலையில், பல்வேறு அமைப்புக்கள் அரசியல் பிரதிநிதிகளிடம் யானை வேலி அமைத்து தருமாறு முறையிட்டும், இதுவரை எதுவித முன்னேற்றமும் இல்லை என மாரிமுத்து குற்றம் சுமத்தினார்.

எவ்வாறாயினும், யானைகளின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை வாகரை பிரதேச சபை தவிசாளர் சி .கோணலிங்கம், பிரதேச சபை உறுப்பினர் தெ .சத்தியநாதன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு, வாகரை பிரதேச செயலகம் ஊடாக உலர் உணவு பொருட்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.