தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மரநாதன், வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் உள்ளிட்ட தமிழ் அரசியல் பிரதிநிதிகள் முல்லைத்தீவுக்குச் சென்று எரிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டனர்.
தமிழர் தாயகமான முல்லைத்தீவு நாயாறுப் பிரதேசத்தில் சென்ற திங்கட்கிழமை இரவு 11.30க்கு தமிழர்களின் எட்டு மீன் வாடிகள், மூன்று படகுகள், இரண்டு இயந்திரம், 27 வலைகள் ஆகியன தீயிட்டு எரிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மீனவர்களுடன் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நேரடியாகச் சென்று உரையாடினர்.
தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில், சிங்கள மீனவர்களை சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்க முடியாதென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் கூறியுள்ளார்.
அதேவேளை, தமது வாடிகளும் மீன்பிடி உபகரணங்களும் தீயிடப்பட்டமைக்கு இலங்கைப் படையினரே காரணம் என்றும், இந்தச் சம்பவத்தை மூடி மறைக்க முல்லைத்தீவில் உள்ள இலங்கைப் பொலிஸார் முற்பட்டதாகவும் மி்னவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சேத விபரங்கள் இதுவரை மதிப்பிடப்படவில்லை. ஆனாலும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவியளிக்க முன்வந்துள்ளதாக கொழும்பில் உள்ள தலைமை அலுவலக அதிகாரியொருவர் கூறினார்.
இறுதிப் போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் மக்கள் குறிப்பாக மீனவர்கள் தமது பொருளாதாரத்தை பகுதி பகுதியாக தாமாகவே மீளக் கட்டியெழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், நன்கு திட்டமிடப்பட்ட முறையில் தீயிட்டு அழிக்கப்பட்டதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.