மக்கள் விருப்பத்தைப் பெறக்கூடிய ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என கட்சி உறுப்பினர்கள் விரும்புவதாக வாசுதேவ நாணயக்கார கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மக்கள் பலத்தைக் காண்பிப்பதற்காக கடந்த புதன்கிழைமை பிற்பகல் கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் வெற்றியளிக்காத நிலையில், கூட்டு எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் பெயரையும் கூட்டு எதிர்க்கட்சி முன்மொழிவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
கோட்டபய ராஜபக்சவை இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு அமெரிக்கா காய்நகர்த்துகின்றதா என கூர்மைச் செய்தித் தளத்தில் ஏலவே செய்தி ஒன்று வெளியாகியிருந்தது.
கடந்த புதன்கிழமை கூட்டு எதிர்க்கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்குச் செல்ல வேண்டாம் என தமது பிரஜைகளுக்கு கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் பயண எச்சரிக்கையும் விடுத்திருந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகளவு வருவார்கள் என்றும் மோதல்கள் ஏற்படலாம் எனவும் கருதியே கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் இவ்வாறான எச்சரிக்கையை விடுத்திருகலாம் எனவும் கூறப்பட்டது.
ஆனாலும் எதிர்பர்த்தளவுக்கு மக்கள் கலந்துகொள்ளவில்லை. கூட்டு எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டம் தோல்வியென ஐக்கியதேசியக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, கோட்டபயவை நியமிக்க வேண்டாம் கூட்டு எதிா்கட்சியில் ஒரு பகுதியினரும் பசில் ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என மற்றுமொரு பகுதியினரும் முரண்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
இவ்வாறான முரண்பாட்டின் அடிப்படையிலேயே வாசுதேவ நாணயக்கார இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவு அறிவிக்கப்படும் என கூறியுள்ளாா் என்றும், ஆனாலும் மஹிந்த ராஜபக்சவின் சம்மதம் இல்லாமல் முடிவுகளை எடுக்க முடியாதெனவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.