இந்தக் ஹர்த்தாலின்போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது என்றும் அதற்கு காரணமாக இருந்தவர் என்ற குற்றச்சாட்டில் மோகன் கைது செய்யப்பட்டார் எனவும் இலங்கைப் பொலிஸார் கூறியுள்ளனர்.
ஆனால், தமது நியாயமான ஜனநாயக ரீதியான போராட்டங்களை நிறுத்த வேண்டும் என்பதற்கான அச்சுறுத்தல் நடவடிக்கையென மட்டக்களப்பு- தமிழ் உணர்வாளர் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
மட்டக்களப்பு- பெரிய புல்லுமலையில் அமைக்கப்படும் போத்தல் குடிநீர்த் தொழிற்சாலையை தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ் உணர்வாளர் அமைப்பு கடந்த பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் ஹர்த்தாலும் அனுஷ்டிக்கப்பட்டது. அன்று போக்குவரத்தில் ஈடுபட்பட இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டது. வீதிகளில் டயர்கள் போடப்பட்டும் எரிக்கப்பட்டன.
இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு மோகன் காரணமாக இருந்தார் எனவும் இதனுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்டு பலர் ஏலவே கைது செய்யப்பட்டதாகவும் அதனடிப்படையிலேயே மோகன் கைதானார் என்றும் இலங்கைப் பொலிஸார் கூறுகின்றனர்.
ஆனால், இலங்கைப் பொலிஸார் வேண்டுமென்றே மோகன் உள்ளிட்ட இளைஞர்கள் பலரை கைது செய்துள்ளதாகவும் தமது நியாயமான போராட்டங்களை முடக்குவதற்கான அபாய எச்சரிக்கை எனவும் தமிழ் உணர்வாளர் அமைப்பு கூறுகின்றது.
மேலும் பலரை இலங்கைப் பொலிஸார் கைது செய்யவுள்ளதாகவும் தமிழ் உணர்வாளர் அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது.