தமிழர் தாயகம் முல்லைத்தீவு
நந்திக்கடலில் பெருமளவு மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கியுள்ளன- மீனவர்கள் கவலை, தொழில் பாதிப்பு
அதிக வெப்பநிலையே காரணம் என்கிறார் மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன்
பதிப்பு: 2018 செப். 12 23:22
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு:
செப். 12 23:50
நிருபர் திருத்தியது
ஆசிரியர் திருத்தியது
உறுதிப்படுத்தப்படக்கூடியது
ஆசிரியபீட அங்கீகாரம்
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகமான வடக்கு மாகாணத்தில் அதிக கடல்வளத்தைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் பகுதியில் அதிகளவான மீன்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறுகடல் பகுதியான நந்திக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் மற்றும் அதிக உப்புச்செறிவு காரணமாகவே மீன்கள் உயிரிழந்துள்ளன. இதனால், கடற்கரையோரத்தில் துர்நாற்றம் வீசுவதுடன், மீனவர்களின் மீன்பிடித் தொழிலும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்டுத் தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் மீது, சிங்கள மீனவர்கள் தாக்குதல் நடாத்தி, அவர்களது வளங்களை சூறையாடி, அவற்றை அழித்தொழித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில். தற்போது இயற்கையும் தம்மை வஞ்சிப்பதாக பாதிக்கப்பட்ட பிரதேச மீனவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.அதேவேளை, வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக நந்திக்கடலில் உள்ள மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கியதாக, மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் இன்று புதன்கிழமை ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
முல்லைத்தீவு நந்திக்கடலில் நேற்றுச் செவ்வாய்க்கிழமையும் இன்று புதன்கிழமையும் பெருமளவு மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.