தமிழர் தாயகம்

மன்னார் முள்ளிக்குளம் பிரதேசத்தில் இலங்கைக் கடற்படை நிரந்தர கட்டடங்களை அமைப்பதாக முறைப்பாடு

அச்சத்தினால் வெளியேறும் நிலையில் மக்கள்
பதிப்பு: 2018 செப். 15 22:13
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 16 02:34
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட முள்ளிக்குளம் தமிழ் கிராமத்தை ஆக்கிரமித்து தளம் அமைத்துள்ள இலங்கை கடற்படையினர் அங்கு நிரந்தர கட்டடங்களை நிர்மாணித்து வருகின்றனர். 2007 ஆம் ஆண்டு மன்னார் சிலாவத்துறையை இலங்கைப் படையினர் ஆக்கிரமித்திருந்தனர். இதனால் அருகில் உள்ள முள்ளிக்குளம் கிராம மக்கள் இலங்கை இராணுவத்தினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர் முள்ளிக்குளம் கிராமம் முற்றுமுழுதாக இலங்கை கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. பின்னர் இலங்கைக் கடற்படையினர் இங்கு பாரிய கடற்படைத்தளம் ஒன்றை அமைத்தனர். இலங்கையின் வடமேற்கு கடற்பிராந்தியத்தின் கட்டளைத் தலைமையகத்தையும் முள்ளிக்குளம் கிராமத்தில் நிறுவிக் கொண்டனர்.
 
இந்நிலையில் இந்த வருட ஆரம்பத்தில் முள்ளிக்குளம் கிராம மக்களின் சுமார் 77 ஏக்கர் காணியை பல அழுத்தங்களின் காரணமாக இலங்கை கடற்படையினர் முசலி பிரதேச செயளாளர் ஊடாக பொது மக்களிடம் கையளித்திருந்தனர்.

இவ்வாறு கையளிக்கப்பட்ட 77 ஏக்கர் காணிகளில் பொதுமக்கள் கொட்டில்களையும் கூடாரங்களையும் அமைத்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் முள்ளிக்குளம் தமிழ் மக்களின் பாரம்பரிய பூர்விக காணிகளில் இலங்கைக் கடற்படையினர் நிலையான கட்டடங்களை அமைத்து வருவதாக முறையிடப்பட்டுள்ளது.

முள்ளிக்குளம் பிரதேச மக்களின் நூறு ஏக்கர் காணிகள் கையளிக்கப்படும் என மைத்திரி- ரணில் அரசாங்கம் ஏலவே அறிவித்திருந்த நிலையில் 77 ஏக்கர் காணிகள் மாத்திரமே பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தன.

மிகுதி 23 ஏக்கர் காணிகளும் இதுவரை கையளிக்கப்படவில்லை. அதற்கான நடவடிக்கைகளும் செய்யப்படவேயில்லை. அதேவேளை கையளிக்கப்பட்ட காணிகள் முள்ளிக்குளம் கிராமத்தின் பிரதான நுழை வாசலில் அமைந்துள்ள பகுதிகளாகும்.

முள்ளிக்குளம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை தளத்தின் முன் பகுதியில் பாதுகாப்பு முன்னரங்குகள் உள்ளன. இதனால்ட தினமும் கடற்படையினரின் பிரசன்னமும் நடமாட்டமும் பயிற்சி நடவடிக்கைகளும் அப்பகுதியில் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக மக்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

கையளிக்கப்பட்ட 77 ஏக்கர் காணிகள் முள்ளிக்குளம் தமிழ் மக்களுக்கு உரியதாகும் அதற்கான உறுதிப்பத்திரங்களும் அவர்களிடம் உண்டு.

அவற்றில் சில காணிகள் மன்னார் மறைமாவட்ட ஆயருக்கு சொந்தமானது ஆனாலும், 40 ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளிக்குள மக்களிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தது.

நன்கொடையாக கையளிக்கப்பட்டமைக்கான உறுதிப் பத்திரங்களும் ஆயர் இல்லத்தினால் மக்களிற்கு வழங்கப்பட்ருந்தன.

தற்பொழுது இலங்கைக் கடற்படையினரின் வசமுள்ள முள்ளிக்குளம் தமிழ் மக்களின் மிகுதி காணிகள் அனைத்தும் இலங்கை அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்டமைக்கான உறுதிப் பத்திரங்களும் உண்டு.

இந்த நிலையில் அரச அனுமதிப்பத்திரங்களிற்கு உரிய காணிகள் முற்று முழுதாக இலங்கை அரசாங்கத்திற்கு செந்தமானதாகவே கருதப்படும் எனவும் எச்சந்தர்ப்பத்திலும் இந்தக் காணிகளை முள்ளிக்குளம் மக்களுக்கு மீள கையளிக்கப்போவதில்லை என்றும் இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ள 77 ஏக்கர் காணிகளில் கொட்டில்களை அமைத்து வாழ்ந்து வரும் மக்களுக்கு, மைத்திரி- ரணில் அரசாங்கத்தினால் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமது காணிகளை கையளிக்குமாறு கோரி முள்ளிக்குளம் மக்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டங்களை நடத்தியிருந்தனர்

மன்னார் தாழ்வுபாடு மீனவ கிராமத்தின் கடற்கரையோரமாகவுள்ள வீதியை மறித்து இலங்கைக் கடற்படையினர் முகாமிட்டுள்ளனர். இதனால் முகாமை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு தாழ்வுபாடு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.