காணி உரிமையாளர்கள் அனைவரிடமும் மடு பிரதேச செயலாளரினாலும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரினாலும் மாவட்ட காணி அதிகாரியினாலும் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களும் மற்றும் காணி உறுதிகளும் கைவசம் உள்ள நிலையில் அவை எவற்றையுமே கருத்திற் கொள்ளாது காணியை விட்டு வெளியேறுமாறு இலங்கை வன இலாக திணைக்கள உத்தியோகத்தர்கள் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேசம் போர்க்கால நடவடிக்கைகளுக்கு உள்ளாகிய பகுதியாகும் இந்தப் பிரதேச மக்கள் அனைவரும் போர்க்கால நடவடிக்கையினால் தொடர்ச்சியான இடப்பெயர்வு மற்றும் பல இழப்புக்களுக்கு உள்ளாகி பாரிய மனித அவலங்களை எதிர்நோக்கியிந்தனர்.
தொடர்ச்சியான இடப்பெயர்வு காரணமாக இவர்களின் காணிகள் நீண்ட காலமாக பராமரிப்பின்றி காணப்பட்டது. இதனால் குறித்த காணிகள் காடுகளாக காணப்படுகிறன.
இன்நிலையிலேயே இலங்கை வனவனப்பாதுகாப்புத் திணைக்களம் தமிழ் மக்களுக்கு சொந்தமான பாரம்பரியக் காணிகளை தமது திணைக்களத்துக்கு சொந்தமான காணியென்று கூறுகின்றது.
காணி உரிமையாளர்கள் தமது காணிகளை சுத்தம் செய்யும் போது வன இலாக திணைக்கள அதிகாரிகள் அவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துகின்றனர்.
மடுப்பிரதேச செயலகப் பிரிவுக்குட்டபட்ட இரணை இலுப்பைக்குளம், குஞ்சுக்குளம், பெரியமுறிப்பு, பரசன்குளம், பெரியபண்டிவிரிச்சான், முள்ளிக்குளம் ஆகிய தமிழர் தாயக பகுதிகளில் இலங்கை வன இலாகா பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் வதியும் தமிழ் மக்கள் மீது விசேட அதிரடிப்படையினர் இலங்கை வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் திணைக்களம், இலங்கைப் பொலிசார், இலங்கைக் கடற் படை, இலங்கை ராணுவம் என பல தரப்பினரும் பல்வேறு அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.