இந்த சீரற்ற காலநிலை அடுத்த சில தினங்களுக்கும் தொடரும் என்பதால் மலைப்பாங்கான மற்றும் சரிவுகள் ஏற்படும் அறிகுறிகள் தென்படும் பகுதிகளில் வாழும் மக்களை தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மழைவீழ்ச்சி தொடர்ந்து அதிகரிப்பதனால் இலங்கையின் பல பகுதிகளிலும் நீர்த்தேக்கங்களிலும் நதிகளிலும் நீரின் அளவு அதிகரித்து வருகின்றது. இவ்வாறு நீர் மட்டம் அதிகரித்தாலும் வெள்ளம் ஏற்படும் அபாயம் இதுவரையில் ஏற்படவில்லை.
இந்த காலநிலையினால் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலைகளிலும் பல விபத்து சம்பவங்கள் பதிவாகியதோடு அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் அவதானத்துடன் இக்குமாறும், மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனங்களைச் செலுத்துமாறும் அதிவேக நெடுஞ்சாலைகள் பராமரிப்பு மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் பாகங்களில் நேற்று சனிக்கிழமை பெய்த கடும் மழையினால் கொழும்பு உள்ளிட்ட பல நகரங்களின் புற வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக இலங்கை இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இதுவரையில் பதுளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மாத்திரம் மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பாரியளவு அனர்த்தங்கள் ஏற்படவில்லையென்றும் குறிப்பிட்டார்.