கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு
காயாங்கேணி சரஸ்வதி வித்தியாலயத்தின் ஒரு ஏக்கர் காணியை இலங்கை இராணுவம் ஆக்கிரமித்துள்ளது
பொதுமக்களின் மூன்று ஏக்கர் காணிகளிலும் முகாம் அமைக்கப்பட்டுள்ளது
பதிப்பு: 2018 ஒக். 09 08:05
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு:
ஒக். 09 10:25
நிருபர் திருத்தியது
ஆசிரியர் திருத்தியது
உறுதிப்படுத்தப்படக்கூடியது
ஆசிரியபீட அங்கீகாரம்
மொழி திருத்திய பதிப்பு
மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட பாடசாலை காணியில் இலங்கை இராணுவம் விடுதி அமைத்து களியாட்டம் நடாத்துவதை நிறுத்தி காணியை விடுவிக்குமாறு பாடசாலை அபிவிருத்திச் சங்கத் தலைவர் சி.பிறேம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காயாங்கேணி சரஸ்வதி வித்தியாலயத்திற்குச் சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் காணியை இலங்கை இராணுவம் ஆக்கிரமித்துள்ளதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்படுவதாக தலைவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.பாடசாலை காணி உட்பட்ட பொதுமக்களின் காணிகள் உட்பட சுமார் நான்கு ஏக்கர் காணியில் இராணுவம் முகாமிட்டுள்ளது. இங்கு சுற்றுலாவிடுதி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மற்றும் பொதுமக்களின் காணியில் விடுதி அமைத்து வியாபார நடவடிக்கையில் இராணுவம் ஈடுபடுவதை தவிர்த்து காணியை விடுவிக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.பாடசாலைக்கு போதிய இடவசதி இல்லாமையில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவரும் மாணவர்களின் கல்வி நடவடிக்கை உட்பட பிறவிதான விடயங்களை மேற்கொள்வதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
கல்வி மட்டத்தில் கீழ்நிலையில் உள்ள காயாங்கேணி மாணவர்களது கல்வித் தரத்தின் மட்டத்தை அதிகரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கவனம் எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.