இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேசுகின்றோம், இலங்கைச் சட்டமா அதிபரிடம் பேசியுள்ளோம் என்று கூறி, தமிழ் அரசியல் பிரதிநிதிகள் காலத்தைக் கடத்துகின்றனர்.
மைத்திரி- ரணில் அரசாங்கமும் ஏதோ கூறி பொய்யான வாக்குறுதிகளை வழங்கி காலத்தைக் கடத்துகின்றது.
ஆகவே வரவுசெலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்து மைத்திரி- ரணில் அரசாங்கத்துக்கான எதிர்ப்பை தமிழ் பிரதிநிதிகள் வெளிப்படுத்த வேண்டும் என கைதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக சிவசக்தி ஆனந்தன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக கொழும்பு வெலிக்கடை, மகசீன் சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களில் மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கைதிகளை சிவசக்தி ஆனந்தன் சென்று பார்வையிட்டுள்ளார். உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளில் பலரின் நிலை மோசமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த மகேஸ்வரன் என்ற தமிழ் அரசியல் கைதி கடந்த 26 வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தற்போது தனக்கு 45 வயது என்றும் கூறியதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
இதேவேளை, கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் நடைபவனிப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
அனுராதபுரம் நகரை நோக்கி இடம்பெறும் நடைபவனிப் போராட்டத்தில் மாணவர்களுடன் விரிவுரையாளர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் இணைந்துள்னனர்.
வடக்கு- கிழக்கு தாயகம் மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.