குடியிருப்பு பகுதியிலுள்ள இலங்கை தென்னிந்திய திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் பூந்தோட்டம் மாணவர்கள் பலர் இவ்வீதியை பயன்படுத்தி வருகின்றனர். நீண்டகாலமாக இந்த வீதி குன்றும் குழியுமாகவே காட்சியளிக்கின்றது.
பாடசாலை மாணவர்கள் உட்பட பலரும் இவ்வீதியைப் புனரமைத்து தருமாறு பல தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித பயனும் இல்லை என பிரதேச மக்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.
100 மீற்றர் நீளமுடைய வீதியில் சில இடங்களில் பாரிய குண்டும் குழியும் காணப்படுவதனால் குடியிருப்பு பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவிற்கு தமது பிள்ளைகளை அழைத்துச்செல்வதற்கு அச்சமாக உள்ளதாகவும் பெற்றோர் கூறுகின்றனர்.
இலங்கையின் முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு - கிழக்கில் கடந்த காலங்களில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததாக பிரசாரம் செய்கின்றது.
அவ்வாறு கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் கண்துடைப்புக்காக நகரை அண்டிய பகுதிகளில் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டதாகவும் வீதிகள் உட்பட கட்டுமாணப் பணிகள் எவையும் கிராமப் புறங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
இலங்கையின் ஒற்றையாட்சி அரசாங்கம் மாத்திரமன்றி இந்த மாதத்துடன் தமது ஆட்சியை நிறைவு செய்யவுள்ள வடக்கு மாகாண சபையும் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என மக்கள் குற்றம்சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.