மே 18 முள்ளிவாய்க்கால் பாடுகொலைகள் நடைபெற்று ஒன்பது ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ இன்று வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையின் முழுமையான விபரம் தமிழ் மொழியில் பின்வருமாறு
மே 18, 2018 ஒடாவா, ஒன்றாரியோ பிரதம மந்திரயின் அலுவலகம்
இலங்கையில் போர் நிறைவுக்கு வந்தமையின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தை இன்று நாம் கடைப்பிடிக்கிறோம். 26 வருடங்களிலும் அதிகமாக நீடித்த இந்தப் போர் கணக்கிட முடியாத காயங்கள், உயிரிழப்புக்கள் மற்றும் இடப்பெயர்வுகள் என்பவற்றுக்கு காரணமாக இருந்தது. போர் முடிவுக்கு வந்தபோதிலும், அதன் பாதிப்புக்கள் தொடர்கின்றன. காணாமல் ஆக்கப்பட்ட தமது குடும்பத்தினர், மற்றும் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்ததென்றும், தமது ஏனைய இழப்புக்களுக்கும் பதிலை எதிர்பார்த்துப் போரில் உயிர் தப்பியவர்கள் காத்திருக்கிறார்கள்.
கடந்த ஒன்பது வருட காலத்தில், போரினால் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்பட்ட பல தமிழ்க் கனேடியர்களை நான் சந்தித்துள்ளேன் நீடித்திருக்கும் சமாதானமும், உண்மையான மீளிணக்கமும் தேவையென்பதற்கு அவர்களது அனுபவங்கள் நினைவூட்டலாக அமைகின்றன.
பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெற்றதும், நம்பகத்தன்மை கொண்டதுமான பொறுப்புக் கூறல் வழிமுறையை அமைக்குமாறு இலங்கை அரசிடம் நான் விடுத்த கோரிக்கையை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இலங்கைத் தீவில் மீளிணக்கம், மீண்டும் மீறல்கள் நிகழாதிருத்தல், சமாதானம், நீதி என்பவற்றை அடைவதற்காகவும் - பொறுப்புக் கூறல், நிலைமாறு கால நீதி, மற்றும் குற்றங்களுக்குத் தண்டிக்கப்படாத நிலையை முடிவுக்குக் கொண்டுவருதல் என்பன தொடர்பாக சர்வதேச சமுகத்திற்கும், நாட்டு மக்களுக்கும் வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்காகவும் - செயற்படும் இலங்கை அரசுக்கும், ஏனையோருக்கும் கனடா அதன் முழுமையான ஆதரவை வழங்குகிறது.
தமிழ் வம்சாவளிக் கனேடியர்களுக்கும், போரில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் இந்த நினைவு தினத்தில் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்க் கனேடியர்கள் எமது நாட்டுக்கு வழங்கிய முக்கியமான பங்களிப்புக்களையும், அவர்கள் எதிர்கொண்ட இன்னல்களையும் உணர்ந்து கொள்ளுமாறு அனைத்துக் கனேடியர்களிடமும் நான் கேட்டுக் கொள்கிறேன்.'