இலங்கை மற்றும் அமெரிக்கப் பிரஜாவுரிமை கோதபாஜ ராஜபக்சவிடம் இருக்கின்றது. ஆகவே இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அவருக்குத் தடையில்லை என்று கூறிய எஸ்.பி. திஸாநாயக்க, 30 ஆண்டுகளுக்கும் மேலான யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த கோதபாஜ ராஜபக்சவை ஜனாதிபதியாக்க வேண்டும் என்றும் கூறினார்.
அதேவேளை, மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களான டலஸ் அழகப்பெருமா, வாசுதேவநாணயக்கார உள்ளிட்ட உறுப்பினர்கள் பலர் கோதபாஜ ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளாராக நியமிக்கப்படுவதை விரும்பவில்லை என கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
கோதபாஜ ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க முடியாதெனவும், கூட்டு எதிர்க்கட்சி அதில் உறுதியாகவே இருப்பதாகவும் வாசுதேவ நாணயக்கார, கடந்த வாரம் கொழும்பில் செய்தியாளர்களிடம் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
இந்த நிலையில், எஸ்.பி. திஸாநாயக்க கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிற்குவதில் பிரச்சினை இல்லையென அறிவித்துள்ளார்.
ஆனால், இந்த விவகாரம் குறித்து முன்னாள் ஜனாதிபதியும் கோதபாஜ ராஜபக்சவின் சகோதரருமான மஹிந்த ராஜபக்ச இதுவரை வெளிப்படையாக ஊடகங்களுக்கு கருத்துக் கூறவில்லை.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சமீபகாலமாக தமிழ் இன அழிப்பு போரை நியாயப்படுத்தி பேசி வருதுடன், சிங்கள பெளத்த தேசியவாதத்தையும் ஊக்குவித்து வருவதாக ஈபிஆர்எல்எப் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து மைத்திரிபால சிறிசேன செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்சவைவிட மிகவும் கடுமையான சிங்கள பௌத்த பேரினவாத கருத்துக்களை மைத்திரிபால சிறிசேன முன்வைத்து வருவருகின்றார்.
குறிப்பாக, முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் நோக்கில், அமைச்சர் சுவாமிநாதன் அமைச்சரவையில் சமர்ப்பித்த பத்திரத்தை நிராகரித்ததன் மூலம், சிங்கள பௌத்த பேரினவாதிகளை மைத்திரிபால சிறிசேன திருப்பதிப்படுத்தியுள்ளார் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்திரி போட்டியிட்டிருந்தார்.
அப்போது அவர் நல்லவர், அதிகார வெறி அற்றவர், தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளை புரிந்து கொண்டவர் என்றொல்லம் சொன்னார்கள்.
ஆனால் இன்று நடப்பது என்ன? இனப்பிரச்சினைத் தீர்வுக்காக எதுவுமே செய்யவில்லை. மாறாக தமிழர் தாயக பிரதேசங்கள் இராணுவ மயக்காலுக்குள் சென்று கொண்டிருக்கின்றன.
அதனை சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு காண்பித்து, அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு வங்கியாக மைத்திரிபால மாற்றி வருகின்றார் என்று சுரேஸ் பிரேமச்ச சந்திரன் தெரிவித்தார்.
அதேவேளை இலங்கை ஜனாதிபதி தேர்தலை ஈழத் தமிழர்கள் முற்றாக புறக்கணிக்கவே வேண்டும். சிங்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எவருமே உண்மையானவர்கள் அல்ல. மாறி மாறி ஜனாதிபதியாக பதவிக்கு வரும் சிங்கள தலைவர்கள் பௌத்த பேரினவாதிகளையே திருப்திப்படுத்தி வருகின்றனர்.
இந்தக் கருத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் தமிழர் தாயக பிரதேசங்களில். மக்களுக்கு அரசியல் விளக்கத்துடனும் பட்டறிவோடும் எடுத்துச் சொல்வதில்லை என்று அவதானிகள் கூறுகின்றனர்.
இதேவேளை கோதபாஜ ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதை தடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக தன்னை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு மைத்திரிபால சிறிசேன. கட்சியின் மூத்த உறுப்பினர்களை கேட்டுக் கொண்டதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
கட்சியில் உள்ள தனக்கு நெருக்கமானாவர்கள் மூலமாக கொழும்பில் உள்ள மேற்குலக நாடுகளின் தூதுவர்களுடனும் பேசி வருவதாக கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
2020 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய ஜனாதிபதி தேர்தல், அடுத்த ஆண்டு முற்பகுதியில் நடைபெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.