நல்லதண்ணி தோட்ட கொழுந்து மடுவத்திற்கு முன்னால் 200இற்கும் மேற்பட்டோர் சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு இலங்கை அரசாங்கத்துக்கும் அரசியல் வாதிகளுக்கும் எதிராக கோங்களை எழுப்பினர்.
சிறுவர் தற்கொலை செய்தல், சிறுவர்களுக்கான கடுமையான தண்டனை, சிறுவர்கள் கடத்தப்படுதல், விற்கப்படுதல், சட்ட முறையற்ற ரீதியில் சிறுவர்களை தத்தெடுத்தல், சிறுவர்களை தொழிலாளியாக பயன்படுத்துதல் போன்ற பல்வேறுப்பட்ட சிறுவர் உரிமை மீறல்கள், துஷ்பிரயோகம் இடம்பெற்று வருவதாக போராட்டக்காரர் தெரிவித்தனர்.
தமிழச் சிறுவர்கள் பாதிக்கப்படுவதோடு, எதிர்கால தமிழச் சந்ததி பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் தோன்றியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அக்கரப்பத்தனை மன்றாசி தோட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தலவாக்கலை பேரூந்து நிலையத்திற்கு அருகில் வைத்து அரசியல்வாதி ஒருவரின் ஒத்துழைப்போடு கடத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளார்.
சிறுவன் ஒருவரும் கடத்தப்பட்டு பின்னர் பிரதேச மக்களினால் மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தமிழச் சிறுவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எட்டுப்பேர் இலங்கைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டபோதும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என போராட்டத்டதில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.
இலங்கை அரசின் தேசிய சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் அதிகார சபையிடம் முறையிட்டபோதும், இதுவரை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மலையகத்தைச் சேர்ந்த தமிழ் அமைச்சர்கள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள எவரும் இது தொடர்பாக பேசாது மௌனமாக இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தினர்.
இதேவேளை, போரின்போது சிறுவர்கள் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக இலங்கை ஒற்றையாட்சி அரசு முன்னர் குற்றம் சுமத்தியிருந்தது. சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகள் கூட, ஒற்றையாட்சி அரசின் கதைகளைக் கேட்டு அன்று கண்டனமும் வெளியிட்டிருந்தன.
ஆனால், மலையகத்தில் வாழும் தமிழச் சிறுவர்களும், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் தமிழர் தாயகப் பகுதிகளில் வாழும் சிறுவர்களும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகின்றமை குறித்து சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகள் ஏன் கவனம் செலுத்தவில்லை என்று முன்னாள் பிரதியமைச்சர் பெ. இரதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது மலையகத்தில் வாழும் தமிழச் சமூகத்துக்கு எதிரான பாரிய மனித உரிமை மீறல் என்றும் அவர் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
மலையகத்தில் உள்ள சிறுவர்களை பாதுகாக்கும் அரசசர்பற்ற நிறுவனங்கள் தமிழ்ச் சிறுவர்களின் உரிமைகள் குறித்து பேசத் தயங்குவதாக பிரிடோ நிறுவனத்தின் தலைவர் மைக்கல் ஜோக்கீம் தெரிவித்துள்ளார்.
சிறுவர் பாடாசலை விவகாரங்களில் சில அரசியல் தலையீடுகள் இருப்பதாகவும் அவர் கூர்மை செய்தித்தளத்திற்குத் தெரிவித்தார். தமது நிறுவனத்தினால் பல பிரதேசங்களில் சிறுவர் விழிப்புணர்வு பற்றிய அறிவுகள் மக்களுக்கு கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை, இலங்கை அரசியலமைப்பின், 2001ம் ஆண்டின் 10ஆம் இலக்கச் சட்டம் சர்வதேச சிறுவர் ஆட்கடத்தல் சட்டத்தின் குடியியல் விடயங்கள் பற்றி கூறுகின்றது. 2005ம் ஆண்டின் 30 ஆம் இலக்க சமவாயச் சட்டம் சிறுவர்களையும் பெண்களையும் விபசாரத்துக்காக ஆட்கடத்தலை ஒடுக்குதல் மற்றும் தடுத்தல் தொடர்பாக வலியுறுத்துகின்றது.
2006ம் ஆண்டின் 4ஆம் இலக்கச் சமவாயச் சட்டம் ஜெனிவா மனித உரிமைச் சபையின் சிறுவர்களை பாதுகாத்தல் தொடர்பாக கூறுகின்றது. 1998ம் ஆண்டின் 50 ஆம் இலக்கச் சட்டத்தின்படி தேசிய சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு அதிகரசபை உருவாக்கப்பட்டது.
ஆகவே சிறுவர்கள் தொடர்பாக இத்தனை சட்டங்களும் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் இருந்தும், மலையகத்தில் வாழும் தமிழச் சிறுவர்களின் உரிமைகள் பாதுகாப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இலங்கை ஒற்றையாட்சி அரசின் கீழ், மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் நிவர்வகிக்கப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆவர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.