சமூக, பொருளாதார மேம்பாடுகள், அரசுகளின் ஆட்சி மேலாண்மை, சமூக நலத்திட்டங்கள், உள்கட்டமைப்பு வசதிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு உள்ளிட்டவைகளை உள்ளடக்கிய புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே வரிசைப்பட்டியல் வெளியிடப்படுவதாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில், இவ் அமைப்பின் தலைவர் கஸ்தூரி ரங்கன் தெரிவித்தார்.
கஸ்தூரி ரங்கன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைத்தின் தலைவராகவும் பதவி வகித்து ஓய்வு பெற்றவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
சில மாதங்களுக்கு முன்பு, இந்திய தொழிற்நுட்ப நிறுவனத்தை (ரூர்க்கீ) சார்ந்த பேராசிரியர் சிங், ஆராய்ச்சியாளர் ஆகார்ஷ் அரோரா மற்றும் ஆஸ்திரேலியா அறிவியலாளர் மொகமத்து சித்திக், உள்ளிட்டோர் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில், 102 வளரும் நாடுகளை உள்ளடக்கிய, பல்முனை பரிமாண வறுமைக்கான (multi-dimensional poverty) மதிப்பீட்டில், இந்திய ஒன்றியம் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வகித்த 54 ஆம் இடத்தில் முன்னேறி தற்பொழுது 26ஆம் இடத்திற்கு வந்துள்ளது.
இந்திய ஒன்றியத்தின் வறுமைக் கோட்டு அளவீடுகளில், நாடளவிலான சராசரியில், 55%லிருந்து 21%ற்கு குறைந்து வந்துள்ளதன் அடிப்படையிலேயே உலகளாவிய வளரும் நாடுகளின் மத்தியில் உயர்ந்து காணப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய ஒன்றியத்தினுள் கல்வி, பொருளாதாரம், மக்களின் வாழ்நிலை உள்ளிட்டவைகளில் வளர்ச்சியடைந்து வரும் தென்னிந்திய நிலத்தின் ஐந்து அரசுகளே (தமிழ்நாடு, கேரளம், கன்னடம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கான) இவையனைத்திற்குமான அடிப்படை ஆகும் என தங்களது ஆய்வின் முடிவுரையாக தெரிவித்துள்ளார்கள்.
முன்னதாக கடந்த மார்ச் மாதம், கருநாடக மாநிலத்தின் அன்றைய முதலமைச்சர் சித்தராமையா, தென்னிந்திய மாநில அரசுகளிடம் இருந்து பெறப்படும் வரியினைக் கொண்டே வட இந்திய மாநிலங்கள் பொருளாதரப் பயனை அடைகின்றன என்றும் ஆனால், இந்திய நடுவண் அரசோ, தென் இந்திய மாநில அரசுகளுக்கான உரிய அங்கீகாரத்தையும் மதிப்பையும் வழங்குவதில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.
2013இல் பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென், ஜீயான் ட்ரெஸ் என்பவரோடு சேர்ந்து எழுதிய An Uncertain Glory: India and its Contradictions என்னும் புத்தகத்தில், நிலையான நீடித்த அரச நிர்வாக முறையினால், தமிழ் நாடு, கேரளா மாநில அரசு சாதித்துள்ளது எனவும், குறிப்பாக பொது சுகாதார நிர்வாகத்தில் இவ்வரசுகளும் மேலோங்கி உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.
மேலும், 1970களில் இந்திய துணைக்கண்டத்தின் சராசரி வறுமைக்கோட்டு அளவுகோலை விட பின்தங்கிய நிலையிலே தமிழ்நாடு இருந்தது எனவும், அடுத்த 40 ஆண்டுகளுக்கு பிறகு வறுமைக்கோட்டு அளவீடு, சமத்துவம், சமூக நலத்திட்டங்கள் என பலவற்றிலும் பிரமிக்கத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் அப்புத்தக்கத்தில் எழுதியுள்ளனர்.
வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று, தமிழகத்தின் அன்றைய தலைவர்களில் ஒருவரான அறிஞர் அண்ணா 1950-60 காலக்கட்டங்களில், இந்திய நிலப்பரப்பு குறித்த தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்திருந்தார். அதிலிருந்து 60 வருடங்களுக்கு பின்னரான புள்ளிவிவரங்களும் ஆய்வறிக்கைகளும் தெற்கு உயர்ந்து வாழ்கிறது என்பதனைக் காட்டுகிறது என திராவிட இயக்க ஆதரவாளர் மருத்துவர் தயாநிதி கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.