யாழ்- இரணைமடு குடிநீர் திட்டம் இலங்கை அரசாங்கத்தின் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கபடுகின்றது.
இதனால் மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை குறித்து சபையின் அதிகாரிகளுக்கு தொழிலாளர்கள் அறிவித்தனர். சபையின் அதிகாரிகள் மனித எச்சங்கள் காணப்பட்ட பகுதியையும் நேரில் வந்து பார்வையிட்டனர். யாழ் நகரில் உள்ள இலங்கைப் பொலிஸாரிடமும் முறையிட்டனர்.
ஆனால், நடவடிக்கை எதுவுமே எடுக்கப்படவில்லை. வருகை தந்த இலங்கைப் பொலிஸார் மனித எச்சங்கள் உள்ள பகுதியை பார்வையிடவுமில்லை. மாறாக அதிகாரிகளுடன் பேசிவிட்டுச் சென்றதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
ஊடகவியலாளர்கள் வந்து பார்வையிட்டு இந்த விடயத்தைப் பெரிதுபடுத்துவார்கள் என இலங்கைப் பொலிஸார் கூறியுமுள்ளனர். இதனால் மனித எச்சங்கள் மீட்கப்பட்டமை குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெறக் கூடிய வாய்ப்புகள் இல்லையென, அங்கு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்வியங்காடு நாயன்மார்க் கட்டில் குடிநீர் விநியோகப் பணிகளுக்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் போர்க்காலத்தில், முன்னரங்கு காவலரன் அமைத்து இலங்கை இராணுவம் நிலை கொண்டிருந்ததாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
1995, 96, 97 ஆம் ஆண்டுகளில் சந்திரிக்கா ஜனாதிபதியாகப் பதிவி வகித்தபோது இலங்கை இராணுவம் முன்னரங்கு காவலரன்களை அமைத்திருந்தது.
கல்வியங்காடு நாயன்மார்க்கட்டுப் பகுதியில் கிளிநொச்சி இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்வதற்கான நிலக்கீழ் நீர் தாங்கி நிர்மானிக்கும் பணிகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்று வெள்ளிக்கிழமை இயந்திர வலு கொண்டு நிலக்கீழ் தாங்கியைச் சுற்றி அகலப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. சுமார் மூன்று அடி ஆழததிற்கு மண்ணை அகழ்ந்தபோது அதற்குள் மனித எச்சங்கள் இருப்பதை தொழிலாளர்கள் கண்டுள்ளனர்.
ஆழமாக்கப்பட்ட குழியின் மேற்குத் திசை நோக்கியே குறித்த மனித எச்சங்கள் காணப்பட்டன. இந்திய நிறுவனம் ஒன்று இந்தக் கட்டடப் பணியில் ஈடுபட்டுள்ளதால். மனித எச்சங்கள் மீட்கப்பட்ட விவகாரத்தை முக்கியப்படுத்தவில்லை.
விசாரணைக்காக கட்டடப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்த இந்திய நிறுவன அதிகாரிகளும் விரும்பவில்லை. இதனால் தொடர்ந்தும் பணிகளை முன்னெடுக்க இலங்கைப் பொலிஸார் அனுமதித்துள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
யாழ்ப்பாணம் நாவற்குழியில், 1996ஆம் ஆண்டு இலங்கைப் படையினரால் 24 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தெடர்பான வழக்கில், இலங்கை இராணுவத்தின் காலாட் படையின் பணிப்பாளர் நாயகமாக, கடந்த மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன முதலாவது எதிரியாகவுள்ளார்.
இந்த நிலையில், சென்ற பத்தாம் திகதி யாழ் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற குறித்த வழக்கு விசாரனையில் இலங்கை இராணுவப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிகளவில் பிரசன்னமாகியிருந்தனர்.
இது குறித்து சட்டத்தரணி குமாரவேல் குருபரன் நீதிமன்றத்தில் ஆட்சேபனையும் தெரிவித்திருந்தார்.
குறித்த வழக்கு விசாரணைக்கு உதவியளித்த பெண்ணும் அவரது மனும் கடந்த சனிக்கிழமை யாழ் வட்டுக்கோட்டையில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டுமிருந்தனர்.
எனவே, கல்வியங்காடு நாயன்மார்க்கட்டுப் பகுதியில் மனித எச்சங்கள் காணப்பட்ட விவகாரத்தையும் இலங்கைப் பொலிஸார் மூடி மறைக்கலாம் என பிரதேச மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.