இந்தக் கண்டனப் பேரணி, ஏ9 வீதியுடாக கிளிநொச்சி, வவுனியா ஊடாக அநுராதபுரத்தை சென்றடையவுள்ளது.
இதில் பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளதுடன், இவர்களுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியியல், விவசாய, தொழிநுட்ப பீட மாணவர்கள் மற்றும் வவுனியா வளாக மாணவர்களும் இணைந்துகொள்ளவுள்ளனர்.
இன்றைய ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்றுள்ள மாணவர்கள், இதுதான் உங்கள் நல்லாட்சியா?, சிங்கள அரசியல் கைதிகளுக்கு ஒரு நீதி தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒரு நீதி, நிபந்தனையின்றி அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய் என்பன போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு அநுராதபுரம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை முற்பகல் 11.30 அளவில் ஒன்றுகூடிய மாணவர்கள் அரசியல் கைதிகளது விடுதலையை வலியுறுத்திய பதாதைகளை ஏந்தியவாறும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்த்தும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று நடைபவனி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சகல அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை உடனே இரத்துச் செய், மேலும் அடக்குமுறை சட்டங்கள் வேண்டாம் என்பன போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் கிழக்கு மாகாணத்தில் ஒட்டப்பட்டுள்ளன.
சம உரிமை இயக்கம் எனும் பெயரில் மட்டக்களப்பு நகர், மஞ்சந்தொடுவாய், ஊறணி, நாவற்குடா போன்ற இடங்களில் இவ்வாறான வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் மதில் சுவர்களிலும், பொது இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.
அரசியல் கைதிகளின் விடுவிப்பு தொடர்பில் வடக்கு, கிழக்கில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், இவ்வாறான கருத்துகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதவிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கம் இதுவரை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காத நிலையில் போராட்டங்கள் தொடருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறியுள்ளார்.