கூட்டு எதிர்க்கட்சியில் ஏற்கனவே 56 உறுப்பினர்கள் அங்கம் வகித்திருந்தனர். ஆனால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் இருந்து நான்கு அமைச்சர்கள் உட்பட 16 உறுப்பினர்கள் விலகி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தனர்.
அவர்கள் தற்போது கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்துள்ளனர். இதனால் 70 உறுப்பினர்கள் உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமக்குரியது எனவும் கூட்டு எதிர்க்கட்சி உரிமை கோரி வருகின்றது.
ஆனால், சம்பந்தனிடம் இருந்து கூட்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எடுப்பது குறித்து மஹிந்த ராஜபக்க்ஷ இதுவரை வெளிப்படையாக எதுவுமே கூறவில்லை.
எனினும், 15 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் பதிவியை வைத்திருப்பது ஜனநாயக விரோத செயல் என்று, தினேஸ் குணவர்த்தன கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு வழங்குமாறு இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜெயசூரியவை சந்தித்து கோரவுள்ளதாகவும் தினேஸ் குணவர்த்தன கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறுவது குறித்து கூட்டு எதிர்க்கட்சி கொழும்பில் கூடி ஆராய்ந்துள்ளது.
அதேவேளை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடமே எதிர்க்கட்சிப் பதவி இருக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கூறுகின்றது.
கூட்டு எதிர்க்கட்சியில் 70 உறுப்பினர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில், கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டுயிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள்.
ஆகவே ஒரே கட்சியைச் சேர்ந்த பலர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் போது வேறு சிலர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து பெரும்பான்மையை நிரூபித்தாலும், ஒரு கட்சிச் சின்னத்தில் போட்டியிட்டு, அதிக ஆசனங்களை பெற்றிருக்கும் கட்சிக்கு மாத்திரமே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியும் என்றும் ஐக்கியதேசியக் கட்சி கூறியுள்ளது.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இலங்கை அரசியலமைப்பச் சட்டத்தின்படி நோக்காமல், அரசியல் காரணங்களின் அடிப்படையில் சிந்தித்தால், அந்தப் பதவி கூட்டு எதிர்க்கட்சிக்கே வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெருமா கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆபத்தானது என்றும், 70 ஆண்டுகள் அரசியல் உரிமைப் போராட்டம் ஒன்றை நடத்தி வரும் தமிழச் சமூகத்தின் சார்பான கட்சி ஒன்றின் மூத்த தலைவர், இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகிப்பதை ஏற்க முடியாதெனவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏலவே கூறியிருந்தார்.
இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு சிங்கள மக்களுக்குரியது என்றும் ஈழத் மிழர்களின் சுயநிர்ணய உரிமை சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டியது எனவும் கூறிவிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து 1983ஆம் ஆண்டு அமிர்தலிங்கம் பதவி விலகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.