இது தொடர்பாக கொழும்பில் செய்தியாளர்களிடம் விளக்கமளித்த அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, சுமந்திரன்- ஜயம்பதி விக்கிரமரத்ன ஆகிய இருவருமே புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தின் பிரதான செயற்பாட்டாளர்கள் என கூறியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையுடன் இருவரும் செயற்படுவதாகவும் அமைச்சர் லக்ஸ்மன் கரியெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பு -புஞ்சி பொரளையிலுள்ள சுதந்திர ஊடகக் கேந்திர நிலையத்தில், சென்ற வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தின் வழிநடத்தல் குழு உறுப்பினர்களான சுமந்திரன்- ஜயம்பதி விக்கிரமரத்ன ஆகிய இருவரும் தமது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற ஏனையவர்களின் இணக்கம் இன்றிச் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தினார்.
புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் குறித்து மேலும் பரிசீலனை செய்வதற்கு அரசியமைப்பச் சபை ஒன்றை இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜெயசூரிய கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்திரு்ந்த நிலையில் மஹிந்த அணி இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
புதிய அரசியல் யாப்பு உருவாக்கம், ஈழத்துக்கு வழி வகுக்கும் என மஹிந்த அணி உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவும் இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
சமஸ்டி ஆட்சியை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோருவதாகவும் அதனை ஏற்க முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்தவாரம் கூறியிருந்தார்.
அதேவேளை, புதிய அரசியல் யாப்பு ஒற்றையாட்சித் தன்மை கொண்டது என்றும் பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை வழங்குவதாகவும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
அதேவேளை, ஒற்றையாட்சித் தன்மை கொண்ட புதிய யாப்பு ஈழத் தமழர்களுக்குத் தீர்வைப் பெற்றுத் தராது என்றும் அந்த யாப்பை நிராகரிக்க வேண்டும் என்றும் அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் தெரிவித்திருந்தார்.
இலங்கையின் இறைமையை பிரிக்கமுடியாது என்பதை அனைவரும் ஏற்றுள்ள நிலையில். ஒற்றையாட்சி என்பது இயல்பானதாகவே அமைந்துவிடும் என்றும் ஒள்றையாட்சி என்ற பதமே அவசியமில்லை எனவும் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன, புதிய யாப்புக்கான வழிகாட்டல் குழுக் கூட்டத்தில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.