மீன்பிடிச் சங்க அங்கத்தவர்கள் வழங்கும் சந்தாப்பணத்தின் மூலம் மீன் குஞ்சுகளைக் கொள்வனவு செய்து குளத்தில் விட்டு, அது பெரிதாகிய பின்னர், அவற்றை பிடித்து விற்பனை செய்து தமது வாழ்வாதாரத்தை நடாத்துவதாக செயலாளர் ஓவியராசா கூர்மைச் செய்தித் தளத்தி்ற்குத் தெரிவித்தார்.
இலங்கை தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டே சங்க உறுப்பினர்கள் மீன்பிடித் தொழில் ஈடுபடுகின்றனர்.
இதனால் எமது சங்கத்தில் அங்கம் வகித்த வேறு சமூகத்தைச் சேர்ந்த சிலர் விலகி புதிய சங்கம் ஒன்றை உருவாக்கி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருதவாக ஓவியராசா குற்றம் சுமத்தினார்.
இவ்வாறு இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்ட அதிகார சபையின் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகளினால் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் கைபெற்றப்பட்டன.
ஆனாலும் மீன்பிடித் தொழிலிலும் கொழும்புடன் தொடர்புடைய அரசியல் செல்வாக்கு பயன்படுத்தப்படுவதால் சட்டவிரோத மீன்பிடி தொடர்ந்து இடம்பெறுவதாகவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
குளத்தை நம்பி வாழ்பவர்களினால் பிடிக்கப்படும் மீன்களுக்கு விலை குறையுமாயின் அதனை அவர்கள் கருவாடாக மாற்றி அதிக விலைக்கு விற்பனை செய்து தமது வருமானத்தை அதிகாரித்துக் கொள்கின்றனர்.
ஆனால், இவ்வாறு சட்டவிரோதமான முறையில் கரைவலைகளை பயன்படுத்துவதினால் சிறிய மீன்குஞ்சுகளும் அள்ளுண்டு வருகின்றன. இதனால் மீன்களின் இனப்பெருக்கமும் குறைவடைவதாக தெரிவித்தார்.
இவ்வாறான செயற்பாடுகளில் குறிப்பிட்ட சிலர் ஈடுபடுவதனால் சமூகங்களுக்கிடையே முரண்பாடுகளும் ஏற்படுவதாக செயலாளர் தெரிவித்தார்.
எனவே, இவற்றைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஓவியராசா கோரிக்கை விடுத்துள்ளார்.