எனினும் கடந்த காலங்களில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையினால், இச்செய்கையை வெற்றியளிக்கவில்லை. ஆனாலும் மரமுந்திரிச் செய்கைக்கு வழங்கப்பட்ட காணிகள், காணிச் சுவீகரிப்புத் சட்டத்தின் கீழ் பெறப்பட்டு கல்வியல் கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூர்மை செய்தித் தளத்திற்கு அவர் தெரிவித்தார்.
அவ்வாறு பெறப்பட்ட காணிகளுக்கு மாற்றீடாக ஏறாவூரில் வேறு காணிகள் வழங்கப்பட்டது. எனினும் மக்கள் அங்கு செல்ல விரும்பவில்லை. இதனால் காணியைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை.
தாழங்குடா மற்றும் கோவில்குளம் பகுதியில் வழங்கப்பட்ட மூன்று ஏக்கர் காணிக்கு இலங்கை அரசாங்கத்தின் சுவர்ண பூமித் திட்டத்தின் கீழ் ஒப்பம் (மஞ்சள் பத்திரம்) வழங்கப்பட்டது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள சரத்தில் இக்காணி இரத்த உறவு அல்லாதோருக்கு விற்கவோ அல்லது கைமாறவோ முடியாது என கூறப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த மாதம் இப்பகுதியில் இரு காணித் துண்டுகள் சகோதர சமூகத்தவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வேலி போடப்பட்டுள்ளது. இது எவ்வாறு முடியும் என ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ஆரையம்பதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குறிப்பிடுகையில்,
எனக்கு மூன்று பிள்ளைகள் மூவருக்கும் ஒரு ஏக்கர் படி பகிர்ந்தளிக்க முற்பட்ட போது பல சட்டதிட்டங்களை கையாள வேண்டும் என பிரதேச செயலகத்தின் காணிப்பிரிவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், இன்று வேறு இனத்தவர்களுக்கு எந்த ஒரு இரத்த உறவுமில்லாமல் எவ்வாறு காணியைக் கொள்வனவு செய்ய முடிந்தது. இதற்கு யார் அனுமதி வழங்கியது என்று கேள்வி எழுப்பினார்.
அத்துடன் பணத்திற்காக சோரம் போகும் அதிகாரிகளினால், எந்தச் சட்டத்தையும் மீறி செயற்பட முடியும் எனவும் அந்தப் பெண் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், ஒரு இனம் செறிந்து வாழும் பகுதியில் மற்றொரு இனம் பலாத்காரமாக நுழைந்து உருவாக்கவுள்ள இன முறுகளைத் தடுப்பதற்கு அதிகாரிகள் முன்னேற்பாடுகளுடன் செயற்பட வேண்டும் எனவு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் க.ராசா கோரிக்கை விடுத்துள்ளார்.