சுமார் 300 குடும்பங்கள் இந்தப் பகுதியில் 1997 ஆம் ஆண்டுக்கு முன்னர் வாழ்ந்துள்ளனர். தமது நிலங்களைத்துப்பரவு செய்து குடியேறுவதற்காக 36 குடும்பங்கள் மூன்று நாட்களாக முயற்சி எடுத்து வருகின்றன.
ஆனால், இது உங்களுடைய காணி இல்லை என்று இலங்கை வனஇலாகா அதிகாரிகள் கூறியுள்ளனர். மக்கள் அந்த அதிகாரிகளுடன் தர்க்கப்பட்டு தமது பாரம்பரிய காணிகள் என கூறியபோதும் அனுமதி வழங்கப்படவில்லை.
அத்துடன் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் தங்களை அச்சுறுத்தியதாக மக்கள் கூறுகின்றனர்.
தங்களை மேலும் அச்சுறுத்தும் நோக்கில் ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டு வீடியோ பதிவுகளையும் இலங்கை இராணுவப் புலனாய்வாளர்கள் மேற்கொண்டதாக மக்கள் கூறுகின்றனர்.
கிராம அலுவலர்கள், பிரதேச செயலாளர்கள் எவருடைய அனுமதியும் இன்றி இலங்கை வன இலாகா அதிகாரிகள் கொழும்பு உத்தரவுக்கு அமைவாக செயற்படுவதாகவும் மக்கள் குறிப்பிட்டனர்.
காஞ்சூர மோட்டைக் கிராமத்தில் வாழ்ந்த மக்கள் 1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொரின்போது இடம்பெயர்ந்து வேறு இடங்களி்ல் வாழ்ந்து வரகின்றனர். வேறு சில குடும்பங்கள் இந்தியாவுக்கும் சென்றுள்ளன.
2002 ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இந்தப் பிரதேசத்திற்குச் சென்று தமது காணிகளைத் துப்பரவு செய்து வாழ்ந்து வந்ததாகவும் மக்கள் சிலர் கூறுகின்றனா்.
ஆனாலும் மீண்டும் போர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இடம்பெயர்ந்தாகவும் முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர், அதாவது 2009 ஆம் மாததத்திற்குப் பின்னரான சூழலில், இரண்டு குடும்பங்கள் அங்கு மீளக் குடியேறி வாழ்த்து வருகின்றன. ஆனால் அடிப்படை வசதிகள் எதுவுமே செய்து கொடுக்கப்படவில்லை.
போரினால் இடம்பெயர்ந்து இந்தியாவுக்குச் சென்று வாழ்ந்து வரும் ஏனைய குடும்பங்களும் மீண்டும் தமது கிராமத்தில் வந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இலங்கை வனஇலாகா அதிகாரிகள் இலங்கை புலனாய்வுத் துறையின் ஒத்துழைப்புடன் தங்களைத் தடுப்பதாக அந்த 36 குடும்பங்களும் கூறுகின்றன.
காஞ்சூர மோட்டைக் கிராமத்தின் அயல் கிராமங்களான வெடிவைத்த கல்லு, மருதோடை ஆகிய கிராமங்களில் சுமார் நுாறு குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
வவுனியா நகரில் இருந்து சுமார் 49 கிலோமீற்றர் தொலைவில் இந்தக் கிராமங்கள் உள்ளன.
இந்தக் கிராமங்களுக்கு கிழக்குப் பக்கமாக முல்லைத்தீவு வெலி ஓயாவும் மேற்குப் பக்கமாக கலாபோவஸ்கம என்ற சிஙகளக் குடியேற்றக் கிராமங்களும் உள்ளன.
1983இல் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் ஜே.ஆா் ஜயவத்தன ஜனாதிபதிபதியாக இருந்தபோது மணல் ஆறு என்ற தமிழ் கிராமத்தை வெலி ஓயா என சிங்களப் பெயராக மாற்றி சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டன்
வவுனியா கொக்காச்சான்குளம் என்ற தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் கிராமம் ஒன்றை, 2012 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது கலாபோவஸ்கம என சிங்களப் பெயரை மாற்றி சுமாா் மூவாயிரத்தி 500 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டன.
மைத்திரி- ரணில் அரசாங்கம் 2018 ஆம் ஆண்டு அந்த மூவாயிரத்தி 500 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களையும் சட்ட ரீதியாக வழங்கியுமுள்ளது.
ஆகவே, இவ்வாறான சிங்களக் குடியேற்றங்களுக்கு ஏதுவான முறையில் வவுனியா வடக்கு எல்லைக்கிராமங்களான காஞ்சூர மோட்டை, காட்டுப் பூவரசங்குளம், நாவலர் பாம் ஆகிய பூர்வீக நிலங்களில் தமிழ் மக்கள் மீளக் குடியேறுவதை இலங்கைப் புலனாய்வுத் துறையினர் இலங்கை வன இலகா திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தடுத்து வருவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வவுனியா நெடுங்கேணி- ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு மக்கள் செல்லகூடாது என இலங்கைத் தொல்பொருட் திணைக்களம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களை பிரிக்கும் நோக்கில், இலங்கையில் 1941 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கல்லோயா அபிவிருத்தி திட்டம், முதலாவது சிங்களக் குடியேற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.