மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், விசேட சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், நில அளவைத் திணைக்கள அதிகாரிகள், இலங்கைப் பொலிஸ் தடயவியல் பிரிவு அதிகாரிகள், கொழும்பில் இயங்கும் காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலக அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதைகுழி உள்ள பகுதியில் பாரிய கூடாரமொன்றினையும், புதைகுழிக்குள் நீர் உட்செல்லாதவாறு மண் அணை ஒன்றினையும் பருவமழைக்கு முன்னதாக அமைப்பதற்கான நிதியை வழங்குவதாக காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலக அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் உறுதியளித்தனர்.
அதன் பிரகாரம் நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் மன்னார் மாவட்ட செயலகம் குறித்த நிதியைக் கொண்டு கூடாரத்தையோ மண் அணையையோ இன்று வரை அமைக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கப்பட்டதன்படி கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தால், இன்று மழை பெய்தபோது அகழ்வுப் பணியை நிறுத்தியிருக்க வேண்டிய அவசியம் இல்லையென அதிகாரிகள் கூறுகின்றனர்.
செப்ரெம்பர் மாதம் முதல் வாரம் வரை நூற்றிப் பதினொரு மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன் 97 மனித எலும்புக் கூடுகள் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு பொதியிடப்பட்டிருந்தன.
செப்ரெம்பர் மாத இறுதியில் மனித புதைகுழி அகழ்வுப் பணியில் 141 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டிருந்தன. அவற்றில் பெரும்பாலானவை நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக பொதி செய்யப்பட்டு மன்னார் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.