இந்தக் கடன்களை வழங்கும் நிறுவனங்கள் ஏனைய வங்கிகளைப் போன்று கடும் நிபந்தனைகள் எவற்றையும் கடனாளிகளுக்கு விதிப்பதில்லை.
இதனால், குடும்பப் பெண்கள் மத்தியில் இந்த நுண்கடன் நிறுவனங்கள் மீது அதீத ஈர்ப்பு ஏற்படுகின்றது. கடன்களைப் பெறுவதற்கு ஐவருக்கு மேற்பட்ட பெண்கள் ஒன்றிணைந்து குழுக்கள் அமைத்தாலே போதுமானதாகும்.
ஒருசில தினங்களிலேயே பயனாளிகளின் கைகளிற்கு பணம் கிடைத்துவிடும். குழுக்களாக கடன்களைப் பெறும் நபர்கள் தமக்கு இடையிலேயே ஒருவருக்கொருவர் பிணையாளிகளாக உள்ளனர். இவ்விதம் குழுக்களாக ஒன்றிணையும் பெரும் எண்ணிக்கையான தமிழ் பேசும் பெண்கள் மன்னாரில் இயங்கும் நிதி நிறுவனங்களுக்கு கடன்களைப் பெறும் ஆர்வத்துடன் சென்று வருகின்றனர்.
ஆனால், இந்த நுண்கடன்களைப் பெறும் பெண்களிடம் அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து எந்தவிதமான குறிக்கோள்களும் நோக்கங்களும் இல்லை.
நுண்கடன்களைப் பெறும் அதிக எண்ணிக்கையான பெண்களின் கணவன்மாருக்கோ அல்லது அந்தக் டும்பத்தைச் சேர்ந்த வேறு உறவினர்களுக்கோ அது குறித்து எதுவுமே தெரிவதில்லையென பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறினார்.
இவ்வாறு கடனாகப் பெறப்படும் பணத்தொகையை குறித்த நிதி நிறுவங்களுக்கு திருப்பிச் செலுத்தும் போது அதிக வட்டித் தொகையுடன் பணத்தை செலுத்த வேண்டியுள்ளதாகவும் சிலவேளைகளில் பணத்தை செலுத்த தவறினால், அத்தொகைக்கு மேலதிக வட்டி அறவிடப்படுவதாகவும் பாதிக்க்ப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.
நிதி நிறுவனங்களில் நுன்கடனைப் பெற்றவர்கள் குறித்த கடன் தொகையை செலுத்துவதற்கு உறவினர்கள் நண்பர்களிடம் கடன் பெறுவதாகவும் வேறு நிதி நிறுவனங்களில் நுண்கடன்களைப் பெற்று முன்னைய கடன் தொகையை செலுத்துவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னார் நகரில் இயங்கும் நிதி நிறுவனங்களின் கடன் அறவீட்டு ஊழியர்கள் தமது நிறுவனத்தினால் வழங்கப்பட்ட நுண்கடன் தொகையை அறவிடுவதில் கடும் போக்குடன் இருப்பதாகவும் கடனாளியான பெண்களிடம் தகாத முறையில் நடக்க முற்படுவதாகவும் இரவு நேரங்களில் கடனாளிகளின் வீடுகளுக்கு சென்று தேவைற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் முறையிடப்பட்டுள்ளது.
நுண்கடனைப் பெற்ற சில பெண்கள் கடனை திரும்பச் செலுத்த முடியாது குடும்பத்துடன் தலைமறைவாகியதுடன் ஒரு சில பெண்கள் தற்கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்ற அடிப்படையில் இந்த விடயம் தொடர்பாக தமிழ் அரசியல் பிரதிநிதிகள் கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தக் கடன் திட்டங்களுக்கு எதிராக பெண்கள் அமைப்புகள் மன்னார் நகரில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.