கண்டனப் பேரணி, ஏ9 வீதியுடாக கிளிநொச்சியைச் சென்றடைந்தது. இதற்கு ஆதரவாக கிளிநொச்சியில் 1 வருடத்துக்கும் மேலாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உட்பட பிரதேச மக்கள், பொது அமைப்புக்கள் என பலரும் ஆதரவு வழங்கினர்.
தொடர்ந்து மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம் ஊடாக நடைபவனி வவுனியாவைச் சென்றடைந்தது. இதன்போதும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், முச்சக்கரவண்டி சங்கத்தினர், பொது அமைப்புக்கள் என பலரும் ஆதரவு வழங்கி நடைபவனியில் பங்கேற்றனர்.
வவுனியாவில் இருந்து மதவாச்சி நோக்கி மத குருமார், பொதுமக்களின் ஆதரவுடன் அரசியல் கைதிகளுக்கு நீதி கோரிய நடைபவனி இன்று இடம்பெற்றது.
இன்றைய தினம் உள்ளுர் நேரப்படி மாலையளவில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய நடைபவனி அனுராதபுர எல்லையைச் சென்றடைந்ததாக, நடைபவனியில் பங்கேற்றுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.
இதேவேளை அரசியல் கைதிகளின் விடுதலையை முன்னிறுத்தி மல்லாவி வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை மாபெரும் கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மல்லாவி அனிச்சங்குளம் பாடசாலைக்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள் வணிகர் கழக உறுப்பினர்கள் மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் இந்தப் பேரணியில் கலந்துகொண்டு தமது அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.