மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலளார் பிரிவில் ஏ5 பதுளை செங்கலடி வீதியில் நகருக்கு 43 கிலோமீற்றர் மேற்காக உள்ள தமிழ் எல்லைக்கிராமங்களில் ஒன்று பெரியபுல்லுமலையாகும்.
இறுதியாக 2010ஆம் ஆண்டு மக்களின் சொந்த முயற்சியினால் மீள்குடியேறிய 300 குடும்பங்களுக்கு எட்டுவருடங்கள் கடந்த போதிலும், ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள் இக்கிராமத்தில் உள்ள அடிப்படை குறைகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
எட்டு வருடங்களில் ஏழு உயிர்களை யானை பலியெடுத்துள்ளது. 5 பேர் காயமடைந்தனர். 20க்கும் மேற்பட்ட வீடுகளை யானை தாக்கியழித்து்ள்ளது.
மிகவும் கஷ்ட்டப்பட்டு செய்யும் பயிர்களையும், பயன்தரும் மரங்களையும் அழிக்கும் வீதம் கடந்த ஒரு மாதகாலத்தில் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக கிராம சேவகர் ஊடாக இலங்கை காவல்துறை, வனஜீவராசிகள் திணைக்களகம் போன்றவற்றில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் விவசாய அமைப்பின் தலைவி தெரிவித்தார்.
யானை வேலிகள் போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள். இரவுவேளையில் யானைகள் கூட்டம் கூட்டமாக வருகிறது. இதில் காட்டுயானைகள் மாத்திரமல்ல சிங்களப் பகுதியிலிருந்து கொண்டுவந்து விடப்பட்ட வளர்ப்பு யானைகளும் உள்ளன.
எவ்வாறாயினும், எல்லைக்கிராம மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட போதும், தற்போது காட்டு மிருகங்களினால் பாதிக்கப்படும் போதும், அதில் இருந்து மீண்டெழுவதற்கு இல்ங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதில் பராமுகமாக இருப்பது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்துவதாக தலைவி மேலும் தெரிவித்தார்.