தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈபிஆர்எல்எப் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்தரன் ஆகியோரும் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் அவர்களை வெளியேறுமாறு கோஷம் எழுப்பினர்.
வடமராட்சி கிழக்கு பகுதியில் சுமார் 1500ற்கும் மேற்பட்ட தென்பகுதி மீனவர்கள் பலாத்காரமாக தங்கியிருந்து கடலட்டை தொழில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தொடர்ச்சியாக எதிர்த்து வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமையும் யாழ் நகரில் உள்ள கடற்றொழிலாளர் நீரியல்வள திணைக்களத்தை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்று நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இன்று திங்கட்கிழமை காலை 9.30க்கு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத்தின் முன்பாக கூடிய நூற்றுக்கணக்கான மீனவர்கள், பிரதான வீதியால் பேரணியாக யாழ். மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்தனர்.
அங்கு ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், மகஜர் ஒன்றை கையளித்த பின்னர், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அங்கும் மகஜர் ஒன்றை கையளித்தனர். ஆளுநரின் இணைப்புச் செயலாளர் மகஜரை பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்திற்கு முன்பாகக் கூடிய மீனவர்கள், தென்பகுதி சிங்கள தொழிலாளர்களை வெளியேற்றுமாறு கோஷம் எழுப்பினர்.
தென்பகுதி சிங்கள மீனவர்களிடம் இலஞ்சம் வாங்காதே என்றும் யாழ் கடற்றொழில் பணிப்பாளர் பதவி விலக வேண்டுமெனவும் கோஷங்களை எழுப்பினர்.
கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தின் பணிப்பாளர், கடல் அட்டை தொழிலில் ஈடுபடும் சிங்கள தொழிலாளர்களிடம் பெருமளவு பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டதாக, போராட்டத்தில் ஈடுபட்ட வடமராட்சிக் கிழக்கு மீனவர்கள் கூர்மைச் செய்தியாளரிடம் தெரிவித்தனர்.
ஆனால், இலஞ்சம் பெறப்படவில்லையென பணிப்பாளரும் மறுத்துள்ளார்.
எனினும் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின், கொழும்பில் உள்ள உயர் அரச அதிகாரிகள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள், வடக்கு கிழக்கு தமிழர் தாயக பிரதேசங்களில். இலஞ்சங்களை இலங்கைப் படையினர் ஊடாக அறிமுகப்படுத்தி நிர்வாகத்தை சீரழிப்பதாக யாழ்ப்பாணத்தில் உள்ள பொது அமைப்புகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.