2009 இல், ஈழத்தில் நடந்த இனவழிப்புப் போரின் தொடக்கம் முதல், இலங்கைப் பேரினவாத அரசு ஈழத்தின் மீது தொடுத்துக்கொண்டிருந்த போரினை நிறுத்த வலியுறுத்தி தமிழகம் எங்கும் எழுந்த போர்க்குரலிலும் போராட்டங்களின் அனைத்து வடிவங்களிலும் பெரும் பங்காற்றிய தமிழக வழக்குரைஞர்களை இம்மாநாட்டை ஒருங்கிணைந்து முன்னெடுதிருந்தமை வரவேற்கப்படவேண்டிய ஒரு விடயம்.
2009 பிப்ரவரி மாதம், சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில், காவல்துறையால் தாக்கப்பட்ட வழக்குரைஞர்கள், ஓய்ந்திடாது, தமிழர்களின் உரிமைக்குரலின் வடிவமாய் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்திருப்பது பல மட்டங்களிலும் பாராட்டப்படுகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர், தொல்.திருமாவளவன், சென்னை உயர்நீதி மன்றத்தின் ஒய்வு பெற்ற நீதிபதிகள் கே.பி. சிவசுப்ரமணியம், ஏ.கே, ராஜன், ஜி.எம் அக்பர் அலி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகவும், ஈழத்தில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு சேர்ந்தியங்கும் இளம் வழக்குரைஞர் சுகாஷ், சி.சந்திரலீலா, மலேசியாவில் இருந்து மகா ராமகிருஷ்ணன், ஆஸ்திரேலியாவில் இருந்து ரெபேகா எ லிம் ஆகிய பெண் வழக்குரைஞர்கள் சிறப்பு உரையாற்றிய இம்மாநாட்டில், வழக்குரைஞர்கள் காலின் கான்ஸ்லாவல் (புதுடெல்லி), கி. தனவேல், ஆர்.சி. பால் கனகராஜ், பி. திருமலை ராஜன், எம். அஜ்மல் கான், வி. சுரேஷ், பாரிவேந்தன், ஜெ.ஜெயராஜ், எஸ், ரஜினிகாந்த், கே.பாலு, டி. பானுமதி, இரா.கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் சிறப்பு பங்கேற்பாளர்களாக கலந்துகொண்டனர்.சானல்4 இன் ஆவணப்பட இயக்குநர் கால்லம் மெக்ரே காணொளி மூலம் பேசிய இம்மாநாட்டில் ஈழத்தில் நடந்தது இன அழிப்பு என்பதனை ஆதாரப்பூர்வமான உரை மூலம் எடுத்து இயம்பினார்.
மலேசியாவில் இருந்து வந்திருந்த வழக்குரைஞர் மகா ராமகிருஷ்ணன் அவர்களின் உரையில்,
காரன் பார்க்கர் மற்றும் பிரான்சிஸ் பொய்ல் போன்றவர்கள் ஏற்கனவே வெளியிட்டிருக்கும் கருத்துக்களுடன் டப்ளின் தொடக்கம் ப்ரேமன் வரை நடந்தேறிய மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு, தமிழர்களும் தமிழர்களுக்கு ஆதரவான நட்புச் சக்திகளும் ஒரு புதிய சர்வதேச சட்ட அத்தியாயத்தையே திறக்கவேண்டியிருக்கிறது என்று வாதிட்டார் அவர்.
ஒரு திசையில் மட்டும் சிந்திக்காமல் சர்வதேச சட்டங்களின் பலவித பக்கங்களையும் தொட்டுச் செல்லும் வகையில் அகலமான ஓர் அணுகுமுறையை வகுத்துக்கொள்ளவேண்டும் என்ற கருத்தை அவர் வலியுறுத்தினார். அவரின் பேச்சு தமிழில் இருந்திருந்தால் விளங்குவதற்கு இலகுவாக இருந்திருக்கும் என்றும், ஆயினும் அவர் கொடுத்த விளக்கம் தமக்கு ஆர்வத்தைக் கூடியிருப்பதாகவும் இளம் சட்டத்தரணிகள் கருத்து வெளியிட்டனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்பொழுது,
சென்னை உயர்நீதி மன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதி சிவசுப்ரமணியம் பேசும்பொழுது,
"2009 ஈழத்தில் போர் உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில் தமிழக அரசு சார்பாக நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்கள் உள்ளடக்கிய குழு ஒன்று டெல்லிக்கு பயணித்தோம். அதிகார மையங்களில் வீற்றிருந்த, போரை நிறுத்த வல்லமை உடைய அனைவரையும் சந்தித்து உடனடியான போர் நிறுத்தம் கொண்டு வர இந்திய அரசு முனைய வேண்டும் என வலியுறுத்தினோம். சோனியா உட்பட அனைவரையும் சந்தித்து முறையிட்டோம். ஆனால், அன்றைய வெளிவிவகாரத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மட்டும் எவ்வளவு முயன்றும் எங்களை சந்திக்க மறுத்துவிட்டார்," எனத் தெரிவித்தார்.
ஓய்வுப் பெற்ற நீதிபதியும் மாநாட்டிற்கான தலைமை வகித்தவருமான து.அரிபரந்தாமன் அவர்கள் பேசுகையில்,
தனித்தமிழ்நாடு பற்றின குரல் மேடையில் ஒலித்த வேளையில் பார்வையாளர்களின் வரிசையில் வீற்றிருந்த ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் கோபமான முகத்துடன் மாநாட்டு அரங்கிலிருந்து வெளியேறியதாக பார்வையாளர் ஒருவர் கூர்மை செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார்.
மாநாட்டு சிறப்பு பங்கேற்பாளர்களாக, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றியோருக்கு நினைவுப்பரிசை வழங்கியதோடு மாநாடு சிறப்புற நடந்தேறத் துணை நின்றனர்.
தமிழகத்தில் இருந்து ஈழத்தமிழர் இன அழிப்புக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அதேவேளை ஈழ விவகாரத்தில் உரிமை கோருவதில் அதீத ஈடுபாடு காட்டி அதன் நிமித்தம் தமக்குள் முரண்பட்டுக்கொள்ளும் அரசியல்வாதிகளையும், வெவ்வேறு இயக்கத்தவரையும் பொருத்தமாகக் கையாளும் திறமை இந்த மாநாட்டுக்குப் பின்னணியில் இயங்கியவர்களுக்கு இருக்கவில்லை என்பது கவலைக்குரியது.
மாநாட்டு ஏற்பாட்டிலும் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பிலும் நேர்த்தியான அணுகுமுறை பின்பற்றப்படவில்லை என்றும் மாநாடு நடக்கவிருந்ததைப் பற்றி சமூக, அரசியல் செயற்பாட்டாளர்கள், முன்னணி ஊடகங்கள் மற்றும் அனுபவ ஊடகவியலாளர்கள் கூட அறிந்திராத வண்ணம் இரகசியம் காத்தமை மாநாடு எந்த நோக்கத்திற்காக நடாத்தப்பட்டது என்ற ஐயப்பட்டைத் தோற்றுவித்ததாகவும், இறுதி நேரத்தில் மாநாட்டுச் செய்தி அறிந்து கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் பலரது முன்னிலையிலும் பேசியதையும் அவதானிக்க முடிந்தது.
இந்த முரண்பாடுகளுக்கு அப்பால், ஈழத்தமிழர் மீது நடாத்தப்பட்ட இன அழிப்புப் போரில் அப்போதிருந்த இந்திய மத்திய அரசின் குறிப்பாக சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி, எம்.கே நாராயணன், சிவ் சங்கர் மேனன் போன்றோருக்கு இருந்த பின்னணிகளை துல்லியமாகத் தொகுத்து, ஆதாரங்களுடன் ஆராய்ந்து, தமிழ் கூறு நல்லுலகுக்கும் அதற்கப்பால் உள்ள பரந்த உலகுக்குக்கும் வெளிக்கொணர வேண்டியது தமிழகத்தைச் சேர்ந்த சட்டவல்லுநர்கள் முன்பிருக்கும் பிரமாண்டமான தார்மீகப் பொறுப்பு.
இந்தியாவின் ஆசீர்வாதம் இல்லாமல் முள்ளிவாய்க்கால் சாத்தியப்படிருக்காது என்பதை இலங்கையின் அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சேயும் அவரது சகோதரரான கோத்தபாய ராஜபக்சேயும் தமது வாய்பட நேரடியாகவே முன்வைத்திருந்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடப்படவேண்டியது.
டப்ளின் தொடக்கம் பிரேமன் வரை நடந்த மக்கள் தீர்ப்பாயத்தின் ஆய்வுகளையும் தீர்ப்பையும் முன்னுதாரணமாகக் கொண்டு இவ்வாறான ஒரு முயற்சியைச் செய்ய முன்வரவேண்டும் என்றும், தமிழகப் பிரிவினை, தமிழகத்துக்கே வழக்கமாகிப்போயிருக்கும் உள்ளக முரண்பாடுகள் போன்ற சிக்கலான விவகரங்களுக்குள் இழுத்துச்சென்று ஈழத்தமிழர் நீதிக்கான சட்ட முயற்சியை திசை திருப்பிவிடாமல் சட்டத்துறை சார்ந்த ஒரு முன்னெடுப்பாக இதை அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் அவதானிகள் முன்வைத்தனர்.
இதற்குப் பலம் சேர்க்கும் வகையில் டப்ளின் தொடக்கம் பிரேமன் வரை நடந்த மக்கள் தீர்ப்பாயம் குறித்த அடிப்படைகளை எடுத்தியம்பும் சில கட்டுரைகளை கூர்மை செய்தித்தளம் தனது விளக்கக் கட்டுரைப் பத்தியில் எதிர்வரும் நாட்களில் வெளிக்கொண்டுவர இருக்கிறது.