சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் கடும் மழைக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், பொதுமக்கள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் என பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆட்சிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கம் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதாக உறுதியளித்திருந்தது.
விசேட நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனவும் வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென போராட்டத்தில் கலந்துகொண்ட உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றபோது பெருமளவு இலங்கைப் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக போராட்டத்தி்ல் கலந்துகொண்ட ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
இதேவேளை, அனுராதபுரம் சிறையில் கடந்த 16 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் கைதிகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.
உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாகவும் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.