அதேவேளை எலும்புக் கூடுகளை அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கு மன்னார் நீதிமன்றம் அனுமதி வழங்கினாலும், இலங்கை நீதியமைச்சின் அனுமதியும் பெறப்பட வேண்டும் என அகழ்வுப் பணியில் ஈடுபட்ட சட்ட மருத்தவ அதிகாரி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எலும்புக்கூடுகளை ரேடியோ கார்பன் ஆய்வுகள் செய்து அதன் வயது மற்றும் எந்தக்காலத்திற்குரியது என்பதை கண்டறிய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறுவர்கள் உட்பட 55 எலும்புக்கூடுகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்ட முறிவுகளும் சில எலும்புக் கூடுகளில் காணப்பட்டன. பெண்கள் அணியும் காப்புகள் உள்ளிட்ட பல மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 43 நாட்களுக்கும் மேலாக அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை, மேலும் ஆய்வு செய்யும்போதுதான், உண்மை நிலையை அறிந்து கொள்ள முடியும் என்று களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ் சோமதேவா கூறுகின்றார்.
இந்த மனிதப் புதைகுழியில் சடலங்கள் உரிய முறைப்படி அடக்கம் செய்யப்படவில்லை என்பதை மீட்கப்பட்ட எலும்புக் கூடுகளில் இருந்து அறிய முடிவதாகவும் பேராசிரியர் ராஜ் சோமதேவா ஏலவே தெரிவித்திருந்தார்.
அதேவேளை. இந்த மனிதப் புதைகுழி தொடர்பான விசாரனைகள் நேர்மையான முறையில் நடைபெறும் என்ற நம்பிக்கை இல்லையென காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் சர்வதேச பிரதிநிதிகள் முன்னிலையில் பொதி செய்யப்படவில்லை என்றும், இலங்கை அரச அதிகாரிகள், இலங்கைப் பொலிஸார் முன்னிலையில் பொதி செய்யப்பட்ட எலும்புக் கூடுகள், மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள்தான என்பதை யார் உறுதிப்படுத்தியது எனவும் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அவ்வாறு மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் உரிய முறையில் பொதி செய்யப்பட்டடிருந்தாலும், கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு, அந்தப் பொதிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட முன்னர் மாற்றம் செய்யப்படலாம் எனவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை, மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் அனைத்தும் மன்னார் நீதிபதியின் உத்தரவுக்கு அமைவாக நீதிமன்ற அதிகாரிகளின் மேற்பார்வையில் பொதி செய்யப்பட்டதாக அகழ்வுப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் கூறுகின்றனர்.