யாழ் வடமராட்சி

பருத்தித்துறைக் கடலில் அத்துமீறி நுழைந்த சிங்கள மீனவர்கள்- மடக்கிப் பிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு

இலங்கைப் பொலிஸாருடன் தர்க்கம்
பதிப்பு: 2018 செப். 18 14:10
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: செப். 18 20:59
main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற் பிரதேசத்தில் அத்துமீறிச் சட்ட விரோத மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட முற்பட்ட சிங்கள மீனவர்கள் எட்டுப்பேரை, வடமராட்சி மீனவர்கள் மடக்கிப் பிடித்து தடுத்து வைத்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு எற்பட்டுள்ளது. வடமராட்சி பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் நேற்றுத் திங்கட்கிழமை இரவு நுழைந்தபோதே பருத்தித்துறை மீனவர்கள் எட்டுப் பேரையும் மடக்கிப் பிடித்தனர். இதனையடுத்து பருத்தித்துறையில் உள்ள இலங்கைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. எட்டு சிங்கள மீனவர்களையும் மீட்பதற்காக பிரதேச செயலாளர், கடற்றொழில் நீரியல்வள அதிகாரிகள் ஆகியோர் வடமராட்சி மீனவர்களுடன் பேச்சு நடத்தினர். ஆனாலும் எட்டு மீனவர்களையும் விடுவிப்பதற்கு அவர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை.
 
சட்டவிரோத மீன்பிடியை நிறுத்துவதற்கு மைத்திரி- ரணில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையேல் சிங்கள மீனவர்களை மீளக் கையளிக்க முடியாதெனவும் மீனவர்கள் நிபந்தணை விதித்தனர்.

ஆனாலும் இலங்கை அதிடிப்படையினரை வரவழைத்து மீனவர்களை மீட்கவுள்ளதாக இலங்கைப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்தனர்.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதங்களின் பின்னர் மடக்கிப் பிடிக்கப்பட்ட எட்டு சிங்கள மீனவர்களையும் இலங்கைப் பொலிஸார் மீட்டு, இன்று பிற்பகல் பருத்துறை பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு தாளையடிப் பிரதேசத்தில் தங்கியிருந்து சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு வருகின்ற எட்டு மீனவர்கள், வடமராட்சி கடலில் நுழைந்து தொழிலில் ஈடுபட முற்பட்டபோதே அவர்களை மடக்கிப் பிடித்ததாக வடமராட்சி மீனவர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தையடுத்து வடமராட்சி, வடமராட்சிக் கிழக்குப் பிரதேசங்களில் பெருமளவு இலங்கைப் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரரோத மீன்பிடி நிறுத்தப்பட வேண்டும் என பருத்தித்துறை உள்ளிட்ட வடமராட்சி, வடமராட்சிக் கிழக்கு மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடற்றொழில் நீரியல்வளப் பணிப்பாளர் நேரடியாக வந்து பேச்சு நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுள்ளனர்.

சட்டவிரோத மீன்பிடியை நிறுத்துவது உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள், தீர்வு கிடைக்கும் வரை கடலுக்குச் சென்று தொழிலில் ஈடுபடப்போதில்லை எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிங்கள மீனவர்களின் அத்துமீறல்களினால், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறிய, மீனவர்கள் இன்று மீண்டும் வீதியில் இறங்கிப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

வடமராட்சி, வடமராட்சிக் கிழக்குக் கடற்பிரதேசத்தின் பல பகுதிகளிலும் தென்னிலங்கை சிங்கள மீனவா்கள் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் கடந்த பல மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனைக் கண்டித்து பருத்தித்துறை. வடமராட்சிக் கிழக்கு மீனவர்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். சட்ட விரோத மீன்பிடி நிறுத்தப்படும் என கடற்றொழில் நீாியல் வளத்துறை அமைச்சர் விஜயமுனி செய்சா கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் உறுதியளித்திருந்தார்.

அத்துடன் வடமராட்சிக் கிழக்கில் தற்காலிகமாக கொட்டில்களில் தங்கியுள்ள சிங்கள மீனவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் வடமராட்சி பருத்தித்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சிங்கள மீனவா்கள் எட்டுப் பேரை வடமராட்சி, வடமராட்சி மீனவர்கள் மடக்கிப்பிடித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட கடற்பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலுக்கு தடை செய்யப்பட்ட சுருக்குவலையைத் தற்காலிகமாகப் பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்படவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் நேற்றுத் திங்கட்கிழமை மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.