செய்தி: நிரல்
ஓகஸ்ட் 13 14:52

அமெரிக்கா இலங்கை இராணுவத்திற்கு தொடர்ந்தும் உதவி- 39 மில்லியன் டொலர்கள் வழங்கப்படும் என துாதரகம் அறிவிப்பு

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை இராணுவத்திற்கு 39 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஹீதர் நொயட், இந்து சமுத்திர வலய பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தி வருவதாகவும் கடந்த 7 ஆம் திகதி இந்தோனேஷியா, மலேஷியா, சிங்கப்பூருக்கு ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் இந்த நிதி வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெளிநாடுகளின் இராணுவ சேவைக்கு உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் இலங்கைக்கும் 39 மில்லியன் டொலர்கள் நிதி வழங்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை அமெரிக்க காங்கிரஸ் வழங்கியுள்ளது.
ஓகஸ்ட் 13 10:57

அமெரிக்கா திருகோணமலையில் இலங்கைக் கடற் படைக்குப் போர்ப் பயிற்சி வங்கியுள்ளது- கொழும்புத் துாதரகம்

(வவுனியா, ஈழம் ) அமெரிக்கக் கடற்படையின் விசேட படைப்பிரிவு அதிகாரிகள் குழு ஒன்று இலங்கையின் கடற்படைக்கு பயிற்சியளித்துள்ளது. அமெரிக்க இலங்கை கூட்டு ஒருங்கிணைந்த பரிவர்த்தனைப் பயிற்சித் திட்டத்தின் கீழ், Flash Style 2018/01 என்ற பெயரில் இந்தப் பயிற்சிகள் கடந்த யூலை மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இந்த மாதம் 10 ஆம் திகதி வரை நான்கு வாரங்கள் இடம்பெற்றதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கூறியுள்ளது. தமிழ் பேசும் மக்களின் தாயகமான திருகோணமலையில் உள்ள இலங்கைக் கடற்படையின் பிரதான முகாமில் இந்தப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த 62 பேருக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இருதரப்பு புரிந்துணர்வு இணக்கப்பாட்டுக்கு ஏற்ப இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளளன.
ஓகஸ்ட் 12 22:23

மட்டக்களப்பு மாவட்ட மண் கொழும்புக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி- விவசாய அமைப்பின் தலைவர் குற்றச்சாட்டு

(மட்டக்களப்பு, ஈழம்) போரினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண் வளங்கள் வெளிமாவட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதாக கதிரவெளி விவசாய அமைப்பின் தலைவர் சு.தங்கவேல் தெரிவித்தார். தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெருகல் ஆற்றிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படும் மணல், கொழும்புக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதனால் இந்தக் கிராமத்தின் விவசாயம் பாதிக்கப்படுவதாக தங்கவேல் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
ஓகஸ்ட் 12 15:51

வெடுக்குநாறி மலைக்குச் செல்லவிடாது தடுத்தன் நோக்கம் என்ன? புத்தர் சிலை வைப்பதற்கான ஏற்பாடு என மக்கள் சந்தேகம்

(வவுனியா, ஈழம் ) தமிழர் தாயகமான வவுனியா நெடுங்கேணி- ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு மக்கள் செல்லகூடாது என இலங்கைத் தொல்பொருட் திணைக்களம் எச்சரிக்கை விடுத்தமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பாரம்பரிய பிரதேசத்திற்குள் சென்று வருவதற்கு இலங்கைத் தொல்பொருள் திணைக்களம் ஏன் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழர் தாயகமான வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் மைத்திரி- ரணில் அரசாங்கம் சிங்கள குடியேற்றங்களை செய்வதுடன் புத்தர் சிலைகளை வைத்து காணிகளை அபகரிப்பதாகவும் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தைப் போன்றே மைத்திரி- ரணில் அரசாங்கமும் செயற்படுவதாகவும் கூறிய அவர் குறி்ப்பிட்டார்.
ஓகஸ்ட் 11 22:21

பொத்தானை தொடக்கம் வாகனேரி வரையான காடுகளுக்குத் தீ மூட்டுவது யார்? அதிகாரிகள் மீது மக்கள் குற்றச்சாட்டு

(மட்டக்களப்பு, ஈழம்) கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காட்டுவளங்களுக்கு இனம் தெரியாத நபர்கள் தீ மூட்டுவதனால், காட்டில் உள்ள வளங்கள், உயிரினங்கள் அனைத்தும் அழிந்துபோவதாக பொத்தானை தமிழ் பிரிவு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் ச.தவநாதன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமங்களில் ஒன்று பொத்தானையாகும். கடந்த காலங்களில் தமிழர்கள் மாத்திரம் வாழ்ந்த பகுதியில் 2007ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில், வேறு சமூகத்தவர்கள் தமிழர்களின் காணிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பலாத்காரமாகக் குடியேறி தமிழர் பாரம்பரிய பிரதேசங்களின் அடையாளங்களை மாற்றி வருவதாவும் அவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.