நிரல்
ஒக். 02 20:38

ஜப்பான் அரசின் இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தில்- நல்லிணக்கம் என்கிறது ஜப்பான் தூதரகம்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகம் அனைத்து நாடுகளினதும் கப்பல்கள் வந்துசெல்லக் கூடிய வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) கடந்த ஓகஸ்ட் மாதம் கொழும்பில் கூறியிருந்தார். அதனையடுத்து ஜப்பான் உதவியின் கீழ் பதினொரு மில்லியன் டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய இரண்டு ரோந்து சேவைக் கப்பல்கள் இலங்கை கடல் பாதுகாப்பு திணைக்களத்திடம் செப்ரெம்பர் 13 ஆம் திகதி கையளிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஜப்பான் கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கிக் கப்பல் உள்ளிட்ட இரண்டு போர்க்கப்பல்கள் சென்ற 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன. இந்த இரு கப்பல்களும் எதிர்வரும் நான்காம் திகதி வியாழக்கிழமை வரை தங்கி நிற்கவுள்ளன.
ஒக். 02 15:02

மட்டக்களப்பு வாகனேரியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு மரணச் சான்றிதழ் கையளிப்பு

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு வாகனேரியில் கண்முன்னாலேயே இலங்கை இராணுவத்தால் இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கும், இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறி மரணச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலளார் பிரிவுக்குட்ட வாகனேரி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ஐந்து சிறிய கிராமங்கள் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய போது கடுமையாக பாதிப்புக்குள்ளாகியிருந்தது. வாகனேரி தமிழ் கிராமத்தில் இலங்கை இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட, சுற்றிவளைப்பில் கைது செய்து இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மற்றும் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் என்று 87 தமிழ், இளைஞர் யுவதிகள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
ஒக். 02 07:41

வாகரையில் காணிகளை அபகரிக்க இலங்கை இராணுவம் முயற்சி வெற்றுக் காகிதத்தில் கையொப்பம் பெறப்பட்டதாக முறைப்பாடு

(மட்டக்களப்பு, ஈழம்) வாகரை மக்கள் குடியிருந்த காணியை, இலங்கை அரச காணி எனக் கூறி அபகரிக்க முயற்சிகள் இடம்பெறுவதாக காணி உரிமையாளர்கள் முறையிட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வாகரை மத்தி மற்றும் ஊரியன் கட்டு ஆகிய கிராம சேவகர் பிரிவில் 56 குடும்பங்களின் சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் நிலைகொண்டுள்ள இலங்கைப் படையின் 233 ஆவது பிரிவு, மக்களின் காணிகளை அபகரித்து நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை அரசாங்கத்தின் வான், கடல் மற்றும் தரைவழி என முப்படைகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தையடுத்து வாகரையில் குடியிருந்த சுமார் 7500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் முற்றுமுழுதாக இடம்பெயர்ந்தன.
ஒக். 02 02:52

தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் நீரகக்கரிம (hydrocarbon) முற்றாய்விற்கென 55 இடங்களை இந்திய அரசு வளைத்துள்ளது

(சென்னை, தமிழ்நாடு) 5900 கோடி ரூபாய் முதலீட்டில் இந்திய ஒன்றியத்தினுள் 55 பகுதிகளை எண்ணெய் மற்றும் வாயுக்கள் (Oil and gas exploration) முற்றாய்வுக்கென ஒதுக்கியுள்ளதாக, கல்லெண்ணெய் மற்றும் இயற்கை வாயு துறை அமைச்சர் (Petroleum and natural gas) தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார் (ஒக்டோபர் 1, 2018). இதில், 41 பகுதிகளை வேதாந்தா நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. வட இந்தியாவில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கப் போராடிய பழங்குடி மக்களுக்கு எதிரான பச்சை வேட்டை உட்பட தூத்துக்குடியில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக போராடிவரும் தமிழர்களை சுட்டுக்கொன்றது என இந்திய ஒன்றிய அரசு நடத்தியது அனைத்தும் இதே வேதாந்தா நிறுவனத்தின் நலனுக்காகத்தான் என தமிழ்த்தேச மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தமிழ்நேயன் கூர்மைக்கு தெரிவித்தார்.
ஒக். 01 18:39

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி மழை காரணமாக இடைநிறுத்தம்- கூடாரம் அமைக்கத் தீர்மானம்

(மன்னார், ஈழம்) மன்னார் சதோச புதைகுழி அகழ்வுப்பணிகள் கடந்த ஒரு வாரத்தின் பின்னர் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்று பெய்த திடீர் மழை காரணமாக கூடார வசதியின்மையினால் அகழ்வுப் பணிகள் தடைப்பட்டுள்ளன. மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகள் கடந்த 24 ஆம் திகதி போயா தினத்திலிருந்து இன்று முதலாம் திகதி வரை மன்னார் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மன்னார் நீதிமன்ற வளாகத்தில் குறித்த மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று மன்னார் மாவட்ட நீதவான் தலைமையில் நடைபெற்றிருந்தது. எதிர்வரும் காலங்களில் பருவமழை பெய்யவுள்ள நிலையில் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டிருந்தது.
ஒக். 01 14:44

மைத்திரி ரணில் அரசாங்கத்தில் நம்பிக்கையில்லை- கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

(கிளிநொச்சி, ஈழம்) வழக்கு விசாரணைகளின்றி பல வருடங்களாக இலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் கிளிநொச்சியிலும் கவனயீர்ப்புடன் கூடிய கண்டனப் போராட்டம் இடம்பெற்றுள்ளது. சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில், இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கிளிநொச்சி டிப்போச் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற போராட்டத்தில், அரசியல் கைதிகளின் உறவினர்கள், பொதுமக்கள், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் என பலரும் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மைத்திரி- ரணில் அரசாங்கம் கைதிகளை விடுதலை செய்தால் நல்லிணக்கத்துக்கான சமிக்ஞை ஏற்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்.
ஒக். 01 00:08

வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய்கள் ஒதுக்கீடு- மதிப்பீட்டு அறிக்கை தயாரானது

(மன்னார், ஈழம்) இலங்கை அரசாங்கத்தின் 2019 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிதியமைச்சின் மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னோடியான மதிப்பீட்டு அறிக்கை, அடுத்த சபை அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஏனைய அமைச்சுக்களை விட பாதுகாப்பு அமைச்சுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்படுவதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது குற்றம் சுமத்தியிருந்தார்.
செப். 30 21:25

பொன்னாலையில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம் ) அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணிக்கு இடம்பெற்ற போராட்டத்தில் பெரும் திரளானோர் கலந்துகொண்டனர். பொன்னாலை மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் போராட்டம் நடைபெற்றது. தமிழர் போராட்ட வரலாற்றில் சிறப்பிடம் பெற்றிருக்கும் பொன்னாலையில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் மைத்திரி- ரணில் அரசாங்கம் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
செப். 30 14:37

சமூகநீதி வரலாற்றைச் சுமக்கும் தமிழ்நாடு கடந்துவந்த பாதை

(சென்னை, தமிழ்நாடு) இந்திய அளவில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்குதல் தொடர்பாக ஆராய 1979 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, 1983 இல் அறிக்கை வழங்கப்பட்டாலும், இந்திய ஒன்றியப் பிரதமர் வி.பி.சிங்க் தான் மண்டல் ஆணையப் பரிந்துரைகளை (50% இடஒதுக்கீடு) நிலைநாட்டினார். இந்திய ஒன்றியத்தின் பிற மாநிலங்கள் 35-50% இடஒதுக்கீட்டையே பின்பற்றி வருகிறபொழுதும் தமிழகத்தில் 69% இருந்து வருகிறது. இதற்கு எதிராக தொடர்ந்தும் நீதிமன்றங்களில் உயர்சாதி வகுப்பினர் வழக்குத் தொடுத்து வருகிறபொழுதும் வெல்லமுடியவில்லை. அடுத்தடுத்து வரவிருக்கிற ஆபத்துக்களை எதிர்கொள்ள முழு வரலாறை அனைவரும் அறிந்துக்கொள்ளும் நோக்கில் கூர்மை சமூகநீதி வரலாற்றைத் தொகுத்து வெளியிடுகிறது.
செப். 30 14:17

போதைப் பொருட்களை கொழும்புக்குக் கடத்தும் தளமாக வடமராட்சிக் கிழக்கு- மீனவர்கள் ஒத்துழைப்பு இயக்கம் முறைப்பாடு

தமிழர் தாயகமான வடமாகாணம யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் போதைப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு கொழும்புக்கு அனுப்பப்படுவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். கடற் பிரதேசத்தின் ஊடாக வடமராட்சி கிழக்கு கடற்கரையில் போதைப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. பின்னர் அங்கிருந்து இலங்கைப் பொலிஸாரின் பாதுகாப்புடன் வேறுறொரு இடத்திற்குக் கொண்டு செல்லப்படுவதாக யாழ் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் கூறுகின்றனார். வடமரட்சி கிழக்கு கடற்கரையை போதைப் பொருட்களை இறக்குவதற்கான தளமாகப் பயன்படுத்துவதாகவும் இலங்கைக் கடற்படை மீதே சந்தேகம் உள்ளதாகவும் அவர் கூறினார். வடமராட்சி கடலில் கடந்த வாரம் போதைப் பொருட்களுடன் படகு கைப்பற்றப்பட்டு சில நபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.